இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் சிங்கப்பூரில் பொது நிகழ்ச்சிகளை, பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று காவல்துறையும் தேசிய பூங்கா வாரியமும் கூட்டு அறிக்கையில் புதன்கிழமை தெரிவித்தன.
அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தினால் பொதுப் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று காவல்துறை கருதுகிறது.
இதர நாடுகளின் அல்லது வெளி அமைப்புகளின் அரசியல் காரணங்களுக்கு குரல்கொடுக்கும் பொதுக் கூட்டங்களுக்கு, உணர்வுகளை தூண்டிவிட்டு பொது ஒழுங்குச் சம்பவங்களுக்கு வழிகோலக்கூடிய கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்காது என்று கூட்டறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் பல இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் நிலவும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கிள்ளுக்கீரையாகக் கருதக்கூடாது.
வெளியே நடக்கக்கூடிய சம்பவங்கள் சிங்கப்பூரின் உள்நாட்டுச் சூழலை பாதிக்க நாம் அனுமதிக்கக்கூடாது என்றும் அறிக்கை வலியுறுத்திக் கூறியது.
ஹமாஸ்-இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் பல நாடுகளில் பல வன்செயல் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
எடுத்துக்காட்டாக பெய்ஜிங்கில் செயல்படும் இஸ்ரேலிய தூதரகத்தைச் சேர்ந்த இஸ்ரேலிய ஊழியர் ஒருவர், ஒரு பேரங்காடிக்கு வெளியே ஆயுதத்தால் குத்தப்பட்டார்.
பிரெஞ்ச் நாட்டின் பள்ளி ஆசிரியர் ஒருவர் அக்டோபர் 13ஆம் தேதி பிரான்சில் குத்தப்பட்டு மாண்டார் என்பதை எடுத்துக்காட்டுகளாக கூட்டறிக்கை குறிப்பிட்டது.
இதனிடையே, ஹோங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் சதுக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் யாரும் அதற்கான அனுமதியைப் பெற தேசிய பூங்கா வாரியத்துக்கு மனு செய்ய வேண்டும் என்று அந்த வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
அந்த இடத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய அல்லது ஏற்பாடு செய்ய உதவ விரும்பும் சிங்கப்பூர் குடிமக்களாக இல்லாதவரும் வெளி அமைப்புகளும் காவல்துறை அனுமதியைப் பெற வேண்டும்.
பேச்சாளர் சதுக்கத்தில், பொதுக் கூட்டத்தில் பேச வேண்டுமானால் சிங்கப்பூரர்களைத் தவிர மற்றவர்கள் காவல்துறை அனுமதியையும் பெற வேண்டும்.
இதனிடையே, சமயம், இனம் பற்றி தகாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று தனிப்பட்டவர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
அப்படி தெரிவிக்கப்படும் கருத்துகள் சிங்கப்பூர் இன, சமய நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும்.
ஒருவரின் இன உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய வகையில் வார்த்தைகளை வேண்டுமென்றே யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு மூன்றாண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.