சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு, பசுமைப் பொருளியல் போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இணங்கி இருக்கிறார்கள்.
பிரதமர் லீ சியன் லூங்கும் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் அத்தகைய துறைகளில் மேம்பட்ட இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்தனர்.
இருவரும் புதன்கிழமை சந்தித்தனர். அப்போது மின்னிலக்கப் பொருளியல், அரசாங்கத்துறை மேம்பாடு பற்றியும் அவர்கள் பேசினர்.
ரியாத் நகரில் உள்ள அல் யமமா அரண்மனையில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மானை புதன்கிழமை திரு லீ சந்தித்தார்.
இரு நாட்டுக்கும் இடையிலான அருமையான இரு தரப்பு உறவை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு வரும்படி திரு லீ சவூதி இளவரசருக்கு அழைப்பு விடுத்தார். அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் உத்திபூர்வ அலுவலகம் ஏற்பாடு செய்த இலக்கு 2030 என்ற செயல்திட்டம் பற்றிய விளக்கக் கூட்டத்தில் திரு லீயும் அவரின் குழுவினரும் கலந்துகொண்டனர்.

