சிங்கப்பூரில் செயல்படும் தொண்டூழிய நல்வாழ்வு அமைப்பான மைண்ட்ஸ் ஹப், ஃபேரர், யூனோஸ், புக்கிட் பாத்தோக் ஆகியவற்றில் சேவை வழங்கி வருகிறது.
அதன் மூலம் 400 பேர் நன்மையடைந்து இருக்கிறார்கள்.
அந்த அமைப்பின் முதலாவது நிலையம் 2022 நவம்பரில் ஃபேரரில் திறக்கப்பட்டது.
அதன் ஆகப் புதிய நிலையம் புக்கிட் பாத்தோக்கில் செயல்படுகிறது. இது வியாழக்கிழமை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
அறிவுமந்த குறைபாடு உள்ளோருக்கு ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது, சமையல் போன்ற செயல்திட்டங்களை புக்கிட் பாத்தோக் நிலையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அத்தகைய அறிவுமந்த குறைபாடு உள்ளோரைப் பராமரிப்போருக்கும் அந்த நிலையம் ஆதரவு அளிக்கிறது.
அது புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் அமைந்துள்ளது. ஒய்எம்சிஏ-மைண்ட்ஸ் புக்கிட் பாத்தோக் என்ற பெயரில் அது செயல்படுகிறது.
மேற்குப் பகுதியில் வசிக்கும் அறிவுமந்த குறைபாடு உள்ளோருக்கு ஒரே இடச் சேவை நிலையமாக அது திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வியாழக்கிழமை நடந்த அதிகாரபூர்வ திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பலரையும் உள்ளடக்கும் வேலை வாய்ப்புகளை மேலும் மேம்படுத்த புதிய மைண்ட்ஸ் ஹப் உதவும் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
18க்கும் மேற்பட்ட வயதுள்ள அறிவுமந்த குறைபாடு உள்ளோருக்கு மேம்பட்டச் சேவைகளை வழங்கலாம் என்று மைண்ட்ஸ் ஹப் நம்புவதாக அதன் தலைமை நிர்வாகி கெல்வின் கோ குறிப்பிட்டார்.
மைண்ட்ஸ் அமைப்பு, 2024 இறுதி வாக்கில் பாசிர் ரிஸ், பொங்கோலில் மேலும் இரண்டு மையங்களைத் திறக்கும்.