சிங்கப்பூர் தேசிய பக்கவாத நலச்சங்கம் ஏற்பாடு செய்யும் வருடாந்தரப் பெருநடை, சனிக்கிழமை (அக். 21) நடைபெறவிருக்கிறது.
பக்கவாதத்திலிருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டுவரும் 600 பேர் அதில் பங்கேற்க உள்ளனர். பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் அதிலிருந்து மீண்டோரின் மீள்திறனைக் கொண்டாடுவதும் ஆரோக்கியமான, துடிப்புமிக்க வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதும் அதன் நோக்கங்கள்.
பெருநடையில் பங்கேற்போர், சங்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கில் ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நடை அல்லது ஓட்டத்தில் ஈடுபடுவர். சிலர் தாங்களாகவே சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி அந்தத் தொலைவைக் கடப்பர். சமுதாய, குடும்ப மேம்பாடு மற்றும் கலாசார, சமூக, இளையர் துறைகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பிலிருந்து பெருநடையைத் தொடங்கிவைப்பார்.
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது பக்கவாதம் ஏற்படும். நோயாளியின் உடலில் அது தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில், பாதிக்கப்பட்டவர் மரணமடைவதும் உண்டு.