தங்களுடைய 5,800 கிலோ மீன், இறைச்சி தயாரிப்புப் பொருள்களில் காலாவதி தேதி இல்லை; அல்லது தவறான காலாவதி தேதி இருந்தது என்பதை உணவு பதனீட்டு நிறுவனமும் அதன் இயக்குநரும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டனர்.
சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பு இதுநாள்வரை நடத்திய புலன்விசாரணைகளில் அபராத தொகையைப் பொறுத்தவரை இதுவே ஆகப் பெரியது என்று தெரிகிறது.
ஃபார் ஓஷன் சீ புரோடக்ட்ஸ் என்ற நிறுவனமும் அதன் தலைமை நிர்வாகியான ஜோர்டன் குயெக் ரூய்மிங்கும், 36, முப்பது குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தியபோது அவர்களுக்குத் தடையை ஏற்படுத்தியதாகக் கூறும் வேறு ஒரு குற்றச்சாட்டின் பேரில் அந்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.
தண்டனை விதிக்கப்படும்போது இதர 97 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
குயெக், 2015 ஜூலை முதல் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்து உற்பத்தி, தளவாடக் போக்குவரத்தை மேற்பார்வை செய்துவந்தார்.
ஃபார் ஓஷன் நிறுவனம் $221,000க்கும் $225,000க்கும் இடைப்பட்ட தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும் என்று அரசு தரப்பு கோருகிறது.
அதேபோல், குயெக்கிற்கு $213,000க்கும் $215,000க்கும் இடைப்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்கிறது.
தொடர்புடைய செய்திகள்
நிறுவனத்திற்கும் குயெக்கிற்கும் நவம்பர் 20ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.