சிறைகளிலும் போதையர் மறுவாழ்வு நிலையங்களிலும் கலவரங்கள், பெரிய அளவு சம்பவங்கள் ஆகியவை நேரும்போது சூழலைக் கட்டுப்படுத்தும் உயரிய அணி ‘ஸ்பியர்’.
‘ஸ்பியர்’ எனப்படும் சிங்கப்பூர் சிறைத்துறையின் அவசரகால நடவடிக்கை அணியில் 2019ல் சேர்ந்து அதன் ஆயுதம், கொள்முதல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார் சிறைச்சாலைகள் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராஜஷேகர் கர்ணாகரன், 37.
சிங்கப்பூர் சிறைத் துறையில் 11 ஆண்டுகள் சேவையாற்றியுள்ள இவர், இவ்வாண்டு ஆகஸ்ட் 21 முதல் 25 வரை நடைபெற்ற ஆறாவது ‘ஏபிஎல்சி’ எனும் ஆசிய சிறைகள் முழு அடைப்பு சவாலின் ஏற்பாட்டுக் குழுவிற்கும் தலைவராக இருந்தார்.
2010லிருந்து ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடந்துவருகிறது இப்போட்டி. கடைசியாக 2018ல் நடந்த இப்போட்டி, கொவிட்-19 தொற்றுச் சூழல் சீராகிவிட்டதை அடுத்து இவ்வாண்டு மீண்டும் நடத்தப்பட்டது.
‘ஏபிஎல்சி’யில் ஆசிய பசிபிக் வட்டாரச் சீர்திருத்த அமைப்புகளைச் சேர்ந்த நிபுணத்துவ அணிகள் பங்குபெற்றன. இரு சிங்கப்பூர் சிறைத் துறை அணிகள் உள்ளிட்ட மொத்தம் ஒன்பது அணிகள் போட்டியிட்டன.
“இப்போட்டியைப் புத்தாக்க முறையில் நடத்த விரும்பினோம். அதனால், தேடி மீட்கும் அங்கத்தில் ஆளில்லாத மேல்பரப்பு வாகனங்களின் பயன்பாட்டைச் சேர்த்துக்கொண்டோம்,” என்றார் திரு ராஜஷேகர்.
‘ரோபோமாஸ்டர்’ என்ற ஆளில்லாத வாகனத்தைப் பயன்படுத்தி, கண்காணிப்பு கேமரா சேதமடைந்த சிறை அறையைத் தொலைவில் வேறு இடத்திலிருந்து பார்வையிட அணிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
“போட்டியாக இருப்பினும் அணிகளுக்கிடையே இருந்த நட்பு பாராட்டும் வகையில் இருந்தது. தங்கள் சுற்று முடிந்தவுடன் ஒவ்வோர் அணியும் இடைவேளைக்குச் செல்லாமல் இருந்து பிறருக்கு ஆதரவளித்தது,” என்றார் டிஎஸ்பி ராஜஷேகர்.
போட்டியில் மூன்றாம் நிலையில் சிங்கப்பூர் சிறைத் துறை அணி வந்தது. முதல் நிலையை மக்காவ் அணி கைப்பற்றியது.
இதற்கு முன்பு, அமெரிக்காவில் நடந்த ‘பாவனைச் சிறைக் கலவரம் 2023’ போட்டியில் சிங்கப்பூர் சிறைத் துறை, 16 அணிகளோடு பொருதி இரண்டாம் நிலையைப் பெற்றது.
இவ்வாண்டின் ஐரோப்பிய கருத்தரங்கில் மரணம் விளைவிக்காத ஆயுதங்களைப் பற்றிய அதன் பகிர்வு, ‘தலைசிறந்த படைப்பு’ விருதையும் பெற்றது.
‘ஏபிஎல்சி’யில் சீர்திருத்த அணிகளின் உத்திகளைப் பரிமாறிக்கொள்ள பயிலரங்குகளும் நடைபெற்றன.
ஆபத்தான சூழல்களில் பணியாற்றும் அதிகாரிகளின் மனநலம் கருதி, சிங்கப்பூர் சிறைத் துறையின் செயல்பாட்டு உளவியல் பிரிவும் ஒரு பகிர்வை நடத்தியது.
அண்மையில் நடந்த மஞ்சள் நாடா ஓட்டம்வழி கைதிகளுக்காக சிங்கப்பூர் சிறைத் துறை செயல்படுத்திவரும் திட்டங்களைப் பற்றி பொதுமக்கள் அறிந்துகொண்டனர்.
“கைதிகளைப் பாதுகாக்கும் அதேவேளை அவர்களைப் பராமரிப்பதிலும் எங்கள் பணி உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்,” என்றார் டிஎஸ்பி ராஜஷேகர்.