பாலர்பள்ளி மாணவர்கள் மேல் கல்விக்கு ஆயத்தமாக உதவி; திறமைகளை மதிப்பிட புதிய சாதனம்

2 mins read
5b5f8147-d5b7-47fa-923c-3bf49f8dc5a8
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தின் குடும்ப தின நிகழ்ச்சியில் புதிய சாதனம் பற்றி அறிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

பிள்ளைகளின் மொழி தேர்ச்சிகளையும் இதர திறமைகளையும் சிறந்த முறையில் மதிப்பிட ஆசிரியர்களுக்கு உதவக்கூடிய ஒரு பரிசோதனை சாதனம், மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் நடத்தும் 18 பாலர்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதைப் பயன்படுத்தி 500க்கும் மேற்பட்ட சிறார்கள் நன்மையடைந்து இருக்கிறார்கள். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மசெக சமூக அறநிறுவன குடும்ப தினத்தில் அந்தச் சாதனம் பற்றி அறிவித்தார்.

ஜூரோங் பறவைப் பூங்கா ஜனவரியில் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 17 ஹெக்டர் பரப்பளவிலான பறவைகள் சொர்க்கம் என்ற புதிய பூங்கா திறக்கப்பட்டது. அதில் மசெக அறநிறுவனத்தின் வருடாந்திர குடும்ப தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் 300 குடும்பங்கள் கலந்துகொண்டன.

அவர்களிடம் உரையாற்றிய துணைப் பிரதமர், வகுப்பறையில் சிறார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஏற்ப ஆசிரியர்கள் பலவற்றையும் சிறாருக்கே உரிய வழிகளில் வடிவமைத்து அதன்மூலம் கற்பித்தல் தரங்களை மேம்படுத்த அந்தப் புதிய சாதனம் உதவும் என்று கூறினார்.

சிங்கப்பூரில் மசெக அறநிறுவனமே ஆக அதிக பாலர்பள்ளிகளை நடத்துகிறது. அதன் 360 பாலர்பள்ளிகளில் 40,000 சிறார்கள் படிக்கிறார்கள்.

‘பள்ளி ஆயத்தச் சாதனம்’ என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய சாதனம், நான்கு முதல் ஆறு வயது வரைப்பட்ட சிறாரின் ஆற்றல்களை, அவர்கள் பள்ளியில் சேர்ந்து கற்பதற்கு முன்பாகவே பரிசோதித்துக் கண்டறிய உதவுகிறது.

அதை ஏ*ஸ்டார் நிறுவனத்தின் சிங்கப்பூர் மருந்தக அறிவியல் கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவப் பள்ளியும் சேர்ந்து உருவாக்கி இருக்கின்றன.

தொடர்ச்சியான பல விளையாட்டுகளையும் கேள்விகளையும் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள அந்த 30 நிமிட பரிசோதனைச் சாதனம், ஒரு பிள்ளையின் ஆற்றலை மதிப்பிடுகிறது.

பிள்ளைகள் தொடக்கப்பள்ளி முதலாம் வகுப்பில் சேர்வதற்கு முன்பே அவர்களின் பொது அறிவு, இலக்கியம், கணக்கு, செயல்பாடுகள் உள்ளிட்ட பலவற்றையும் அது மதிப்பிடுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தனிப்பட்ட வேறு ஒரு முயற்சியாக, பாலர்பள்ளியில் படிக்கும் சிறாரின் ஆற்றல், ஒரு மேம்பாட்டு தரப் பட்டியல் மூலமாகவும் சோதிக்கப்படுகிறது.

அந்தப் பட்டியலை மருந்தக மனோவியல் வல்லுநர்களும் குழந்தை மருத்துவத் துறையினரும் பரிந்துரைத்து இருக்கிறார்கள்.

பிள்ளைகளின் ஆற்றல் அவர்களுக்கு கற்பிக்கப்படக்கூடிய பாடத்திட்டங்களுக்கு இணையாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த அந்தத் தரங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

குறிப்புச் சொற்கள்