வேறுநாட்டு பதற்றம் நம்மைப் பாதிக்க சிங்கப்பூரர்கள் அனுமதிக்கக்கூடாது: பிரதமர் லீ

வேறுநாட்டு பதற்றம் நம்மைப் பாதிக்க சிங்கப்பூரர்கள் அனுமதிக்கக்கூடாது: பிரதமர் லீ

2 mins read
a7569b05-6485-4ce6-88ce-e8fe2cf8ea75
சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு இன, சமயங்களைச் சேர்ந்தோர் தங்களுக்கு இடையில் சிறந்த உறவுகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம் என்றார்.   - படம்: எஸ்பிஹெச் மீடியா

வேறு எங்கோ எழுந்துள்ள பதற்றங்கள் நமது சமய நல்லிணக்கத்தைப் பாதிக்க சிங்கப்பூரர்கள் அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக்கொண்டு உள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு இன, சமயங்களைச் சேர்ந்தோர் ஒருவருக்கொருவர் சிறந்த உறவுகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கிய பின்னர் சிங்கப்பூரின் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிரும் சிங்கப்பூரின் யூத சமயத் தலைவர் ரப்பி மோர்டிசாய் அபர்ஜெல்லும் பரஸ்பரம் கடிதங்களை அனுப்பி ஐக்கியத்தை வலியுறுத்தியததன் தொடர்பில் தாம் மகிழ்வதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

“அவர்களின் கடிதப் பரிமாற்றம் வெளியிடப்பட்டது. முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மட்டுமல்ல, இதர சமயக் குழுக்களுக்கும் ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்கள்தொகைக்கும் கருத்துப் பகிர்வு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதற்கான ஒரு சமிக்ஞையே அச்சம்பவம்.

“மேலும், பதற்றமான வேளைகளில் நாம் ஒன்றிணைவதோடு நமது நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க மீண்டும் உறுதி எடுத்துக்கொள்வோம் என்பதற்கும் அது ஓர் எடுத்துக்காட்டு.

“எதிரெதிர் தரப்பினரைப் பாதிக்கும் சம்பவங்களுக்குப் பதில் இது எவ்வளவோ மேல். இதனையே நாம் இனியும் தொடருவோம்,” என்றார் பிரதமர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட ஆறு நாள் பயணத்தின் முடிவில் அபு தாபி நகரில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் திரு லீ பேசினார்.

சிங்கப்பூர் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் யூதத் தலைவருக்கு எழுதிய கடிதம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

“சிங்கப்பூரில் ஒவ்வொரு சமூகமும் இதர சமயங்களைச் சேர்ந்தவர்களுடன் அமைதியான சூழலில் வாழ முடியும். பன்மயத்தைக் கொண்டாட முடியும்.

“இத்தகைய அமைதிகரமான சகோதரத்துவ சகவாழ்வை மேலும் பலப்படுத்துவது இப்போது இன்னும் முக்கியமானதாக ஆகி இருக்கிறது,” என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதற்குப் பதிலளித்த யூதத் தலைவர் ரப்பி, சிங்கப்பூரில் உள்ள யூத, முஸ்லிம் சமய மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை தமது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்