சிங்கப்பூர் நாணய ஆணையமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் புதன்கிழமை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
தனது வாடிக்கையாளர்களுக்கு மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்ற ஆபத்துகளைக் குறைக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உள்ள கடமைகளை அந்த அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.
பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தாத கைப்பேசி இணைப்பு கட்டமைப்புகள், ஒரு குறிப்பிட்ட மோசடிகளுக்கு ஆளாகக்கூடிய அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய வேண்டி இருக்கும்.
இத்தகைய ஒரு விதிமுறை நிதி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
மோசடிக்கு ஆளான ஒருவர் இழந்த தொகையை அவருக்குத் திருப்பி கொடுக்கக்கூடிய ஓர் ஏற்பாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் இதர உள்கட்டமைப்புச் சேவை நிறுவனங்களையும் உள்ளடக்கும் முதல் நாடு என்ற நிலை இதன் மூலம் சிங்கப்பூருக்கு கிடைக்க இருக்கிறது.
சிட்டிபேங்க், டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி போன்ற சில்லறை வர்த்தக வங்கிகள் கிராப் போன்ற பட்டுவாடாச் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உள்ள பொறுப்புகளை கணிக்கக்கூடிய உத்தேச அணுகுமுறை ஒன்றின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு இடம்பெறுகிறது. வாடிக்கையாளர்களின் பணத்தை இவை பாதுகாக்கின்றன.
ஆகையால், மோசடிப்பேர்வழிகளால் அந்தப் பணம் தவறாகக் கையாளப்படுவதைத் தடுத்து நிறுத்தி பணத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பு இந்த அமைப்புகளுக்கு இருக்கிறது.
மோசடிகளைத் தடுக்கக்கூடிய ஆற்றல்மிகு கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு இந்த நிதி நிறுவனங்களுக்கு உண்டு.
தொடர்புடைய செய்திகள்
சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றைச் செம்மையான முறையில் கையாள வேண்டிய பொறுப்பும் இவற்றுக்கு இருக்கிறது என்பதை அந்த இரண்டு ஆணையங்களின் கூட்டறிக்கை சுட்டிக்காட்டியது.
இந்தக் கடமைகளை அந்த நிறுவனங்கள் முறையாக நிறைவேற்றி வந்தால் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கும் அப்பாவிகளுக்கு பணத்தைத் திருப்பி தர வேண்டிய தேவை இவற்றுக்கு இருக்காது.
இத்தகைய நிலவரங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தாங்களேதான் ஏற்க வேண்டி இருக்கும். இவர்கள் நிதித்துறை சச்சரவு தீர்வு நிலையத்திடம் புகார் செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

