சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சி, வியாழக்கிழமை மற்றொரு புதிய முகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
எதிர்க்கட்சியின் செங்காங் குழுத் தொகுதியில் மசெக கிளைத் தலைவராக மார்கஸ் லோ களத்தில் இறங்கவிருக்கிறார்.
இதற்கு முத்தாய்ப்பாக நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து செங்காங் ஈஸ்ட் பிரிவு கிளைத் தலைவர் பொறுப்பை அவர் ஏற்பார். அப்பொறுப்பில் தற்போது இருக்கும் திரு லிங் வெய்ஹோங்குக்கு கட்சியில் மற்றொரு பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு பேரை மசெக அறிமுகப்படுத்தியது. தற்போது 3வது நபராக மார்கஸ் லோ அறிமுகமாகியுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் வசமுள்ள செங்காங் குழுத் தொகுதியை கைப்பற்றுவதற்காக மக்கள் செயல் கட்சி வியூகம் வகுத்து வருகிறது.
இந்தத் தொகுதியில் இணைப் பேராசிரியர் எல்மி நெக்மேட் (செங்காங் சென்ட்ரல்), திருவாட்டி தியோடோரா லாய் ஸி யி (செங்காங் நார்த்), முன்னாள் மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் (செங்காங் வெஸ்ட்) ஆகியோர் அடங்கிய அணி, மசெக சார்பில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போது திரு லோவும் இணைந்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி ஹி டிங் ரு, இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம், லூயிஸ் சுவா, திருவாட்டி ரயிஸா கான் ஆகியோர் அடங்கிய அணியிடம் மக்கள் செயல் கட்சி தோல்வியடைந்தது. அப்போது மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் லாம் பின் மின் மட்டுமே மீண்டும் அக்குழுத் தொகுதியில் சேவையாற்றி வருகிறார். மற்ற மூன்று மசெக அடித்தளத் தலைவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
2015ஆம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் 40 வயது திரு லோவை வியாழக்கிழமை மசெக முறையாக அறிமுகப்படுத்தியது.
திரு லோ, தற்போது பொது விவகார, உத்திபூர்வ தொடர்புப் பிரிவின் தலைவராக இருந்து வருகிறார். டெமுஸ் என்பது அவர் பணியாற்றும் நிறுவனம் என்று லிங்க்டின் தெரிவிக்கிறது. இந்நிறுவனத்தின் பெரும்பங்குகளை தெமாசெக் வைத்துள்ளது.