சிங்கப்பூரிலுள்ள 18 முஸ்லிம் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பான இந்திய முஸ்லிம் பேரவையின் புதிய பெயரையும் சின்னத்தையும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அறிமுகப்படுத்தினார். ‘சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை’ என்று அந்த அமைப்புக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இப்பேரவையின் 30வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு தர்மன் கலந்துகொண்டார்.
மக்கள் கழக அடித்தள மன்றத்தின் உள்ளரங்கில் இரவு 7 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் உறுப்பு அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், இதர சமூக அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜசேகர், இஸ்லாமிய சமய மன்றத்தின் முன்னாள் தலைவரும் அல்ஜீரியாவுக்கான சிங்கப்பூர்த் தூதருமான திரு முகம்மது அலாமி முசா ஆகிய இருவருக்கும் ‘சமூக நல்லிணக்க விருது’ வழங்கப்பட்டன.
அதேபோல் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான திரு ஏ ஆர் மசூதுவிற்கு எம்கேஏ ஜப்பார் வாழ்நாள் சாதனையாளர் விருதும், திரு ஷெயிக் அலாவுதீனுக்கு சமூக சேவை விருதும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு இப்பேரவை குறித்த ஆண்டுமலர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

