சிங்கப்பூரின் பெரும்பான்மை செய்தித்தாள் விநியோகிப்பாளர்களைப் பிரதிநிதிக்கும் இரண்டு சங்கங்கள் திங்கட்கிழமையன்று கூடி, அதிகரிக்கும் செலவுகளால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்துப் பேசின.
அதிகரிக்கும் செலவுகளாலும் அச்சுப் பிரதிக்கான சந்தாக்களில் ஏற்பட்டுள்ள சரிவாலும் தங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் செய்தி விநியோகிப்பாளர் சங்கத்தினரும் (எஸ்என்விஏ) சிங்கப்பூர் செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் சங்கத்தினரும் (எஸ்என்டிஏ) தெரிவித்தனர்.
ஒரு நாளில் சுமார் நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள், மாதம் $200 முதல் $700 ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சவால்களால் சம்பள உயர்வு இன்றி அவர்கள் வேலை பார்ப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், ‘கிராப்’, ‘புட்பாண்டா’ போன்ற விநியோகத் தளங்களைச் சேர்ந்த ஊழியர்களாலும் தங்களின் வேலை தொடர்பில் போட்டி அதிகரித்துள்ளது என்றனர் இரு சங்கத்தினர்.
எஸ்என்டிஏ ஆலோசகரும் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கான் தியாம் போவுடன் இரண்டு சங்கத்தினரும் சந்தித்து ஏற்ற தீர்வுகள் குறித்துக் கலந்தாலோசித்தனர்.
செய்தித்தாள் விநியோகக் கட்டணத்தை உயர்த்துவது மூலம் சில விநியோகிப்பாளர்களின் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கலாம் என்று கூறிய எஸ்என்விஏ தலைவர் திரு ஜெய குமார், எஸ்என்டிஏ தலைவர் திரு எரிக் டான் ஆகிய இருவரும் இது குறித்துப் பேச எஸ்பிஎச் மீடியாவை அணுக உள்ளதாகக் கூறப்பட்டது.
எஸ்பிஎச் மீடியாவின் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றின் விநியோகத்தை 390 செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் நிர்வகித்து வருவதாக எஸ்பிஎச் மீடியா தெரிவித்தது.