உணவுக்கொடையாளர் நிசார் ஷரிஃப் காலமானார்

3 mins read
91d17234-19ee-4e5a-aebb-5969859b4bc6
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய 2018ம் ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்கு தேர்வானவர்களில் திரு நிசார் ஷரிஃபும் ஒருவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘அனைவருக்கும் இலவச உணவு (ஃபிரீ ஃபுட் ஃபார் ஆல்)‘ என்ற உள்ளூர் அறநிறுவனத்தின் தோற்றுநர் நிசார் முஹம்மது ஷரிஃப் செவ்வாய்க்கிழமை (அக்.31) தமது 53ஆம் வயதில் காலமானார்.

அவரது அறநிறுவனம், 144,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி இருக்கிறது.

தானமாக வழங்கப்படும் உணவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 2014ஆம் ஆண்டில் அந்த அறநிறுவனத்தைத் திரு நிசார் தோற்றுவித்தார்.

‘பலரின் உள்ளங்களைத் தொடும் வகையில் அனைவருக்கும் அன்னதானம் அளித்த எங்களின் தோற்றுநருக்கு பிரியாவிடை’ என்று அந்த அறநிறுவனம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

வசதி குறைந்தோருக்கு இலவச உணவளிக்கும் பற்பல சமூக அறப்பணித் திட்டங்களை நிறுவுவதற்குத் திரு நிசார் உதவியுள்ளார். சமூகத்தில் அனுதாபத்தையும் கருணையையும் அவர் விதைத்தார். மேலும், அனைவரையும் உள்ளடக்கி, சமத்துவம், நீடித்த நிலைத்தன்மை ஆகியவை வெளிப்படும் வகையில் அவர் செயலாற்றினார் என்று அந்தப் பதிவு தெரிவித்தது.

திரு நிசாருக்கு நான்கு பிள்ளைகள். கடைசிப் பிள்ளையான திரு ஷேக் முகம்மது அமார், 21, அந்த அறநிறுவனம் தம் தந்தைக்கு ஐந்தாம் குழந்தை போன்றது என்றார்.

தம் தந்தை அவரது இறுதிநாள் வரையிலும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்குவதையே எண்ணத்தில் வைத்திருந்தார் என்று திரு அமார் சொன்னார். அவரே தற்போது அறநிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

திரு நிசார் சிலகாலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மற்றவருக்கு உதவுவதையே தமது தலையாயக் கடமையாக திரு நிசார் கருதினார் என்று அவருடன் சேவையாற்றிய திரு முகம்மது ஃபைஸ் செலாமாட் 45, கூறினார். இவர் 2014 முதல் ‘எஃப்எஃப்எஃப்ஏ’ அறநிறுவனத்தில் தொண்டாற்றிவருகிறார்.

வீவக வீடுகளிலும் யூனோஸ் பள்ளிவாசலிலும் இலவச உணவுப் பொட்டலங்களைத் தனி ஒருவராக சொந்தச் செலவில் வழங்கிவந்த திரு நிசாரின் நற்சேவையைக் கேள்விப்பட்டபின் அவருடன் இணைந்துகொண்டார் திரு ஃபைஸ்.

“எவரொருவரும் பசியோடு இருப்பதைத் திரு நிசாரால் பொறுத்துக்கொள்ளமுடியாது. அவருக்கு தம்மிடம் உள்ளதை இல்லாதோருக்குக் கொடுப்பது என்பது எளிதான காரியம்,” என்றார் திரு ஃபைஸ்.

உணவங்காடிகளில் இருவரும் அமர்ந்து உணவருந்தும்போதெல்லாம் எளியோர் யாரேனும் பசியோடு உள்ளார்களா என்று திரு நிசார் சுற்றிப் பார்த்துக்கொண்டே இருப்பார் என்றும் திரு ஃபைஸ் சொன்னார்.

‘ஹோம்லெஸ் ஹார்ட்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’, ‘எஸ்ஜி அசிஸ்ட்’ உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் திரு நிசாருக்குத் தங்கள் இரங்கல் செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருகின்றன.

திரு நிசார், தொலைநோக்குப் பார்வையுடன் மக்களை ஒருங்கிணைக்கும் குணம் கொண்டவர் என்று அவருடைய நண்பர் திரு ஜேசன் சாய் குறிப்பிட்டார்.

உடல்நலமில்லாதபோதும் படுக்கையிலிருந்துகொண்டே, உதவி கேட்ட கென்யா, ஏமன், காஸா போன்ற நாடுகளுக்கும் தம்மால் ஆனவற்றை தம் தந்தை அனுப்பிவைத்துள்ளார் என்று திரு அமார் கூறினார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய 2018ஆம் ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்குத் தேர்வானவர்களில் திரு நிசாரும் ஒருவர். 2020ஆம் ஆண்டு அதிபரின் சிறந்த மனிதர்கள் பிரிவில் தொண்டூழியம் மற்றும் கொடைவள்ளல் விருதும் திரு நிசாருக்கு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்