சிங்கப்பூரில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை நிலையம் புதன்கிழமை தகவல் வெளியிட்டது.
சில நாள்கள் பிற்பகலில் பெய்யும் மழை மாலை வரை நீடிக்கக்கூடும் என்று நிலையம் குறிப்பிட்டது.
பொதுவாக நவம்பர் மாதத்தின் முதல் வாரம், இரு பருவமழைக் காலங்களில் இடைப்பட்ட காலமாக இருக்கும். அந்த நேரத்தில் மிதமான காற்று, இடியுடன் கூடிய மழை பெய்வது வழக்கமாக இருக்கும் என்று வானிலை நிலையம் கூறியது.
அதே நேரம் இக்காலக்கட்டத்தில் அதிக அளவில் மின்னல்கள் பதிவாகும்.
சிங்கப்பூரில் அதிகமாக மழை பெய்யும் மாதங்களில் நவம்பர் மாதமும் ஒன்று என்று நிலையம் நினைவூட்டியது.
இம்மாதத்தின் முதல் இரு வாரங்களில் பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும் 35 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருக்கும்.