வசதி குறைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘ஷேர்-ஏ-டெக்ஸ்ட்புக்’ எனும் திட்டத்தின் இவ்வாண்டிற்கான முயற்சியை ஃபேர்பிரைஸ் குழுமம் அண்மையில் அறிவித்திருந்தது.
ஆண்டுதோறும் நடைபெறும் இத்திட்டம், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் இருக்கும் பாட நூல்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
நிச்சயமற்ற உலகளாவிய பொருளியல் சூழலால் புத்தக பதிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டு தொடக்கத்தில் பள்ளி பாட நூல்களின் விலை ஏறக்குறைய ஏழு விழுக்காடு அதிகரித்தது.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் உடைய குடும்பங்கள், பாட நூல்களின் விலையேற்றத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய ஃபேர்பிரைஸ் குழுமம் செப்டம்பரில் ஆய்வு நடத்தியது.
நடுத்தர, மேல் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்களில் பத்தில் எழுவர் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பாட நூல்களைப் பெறுவதை தாங்கள் பரிசீலிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
பயிற்சி நூல்கள், திருத்தப்பட்ட படிவ நூல்கள், முன்னாள் தேர்வுத் தாள்கள், கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட கணிதம், தாய்மொழி, ஆங்கிலப் பாட நூல்கள் ஆகியவற்றை ஆய்வில் பங்கேற்றவர்களில் 86 விழுக்காட்டினர் விரும்புவது தெரியவந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட நூல்களைப் பெறுவதன் மூலம் குடும்பங்கள் ஓராண்டுக்கு $299 வரை பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
தீவு முழுவதும் இருக்கும் 150க்கும் மேற்பட்ட ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பாட நூல்களை நவம்பர் 30ஆம் தேதிவரை மக்கள் வழங்கலாம். பொதுமக்கள் முன்பதிவு செய்துகொண்டு டிசம்பர் 6ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதிவரை எண் 99 ஹேக் சாலையில் பாட நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேல்விவரங்களுக்கு https://fpg-share-a-textbook.com/ எனும் இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.