மூத்தோர், மின்னிலக்கத் திறன்களில் குறிப்பிடும் அளவுக்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
அறுபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் சொந்தமாக திறன்பேசியை வைத்துக் கொண்டு தொடர்பு கொள்ளவும், தகவல்களை பெறவும், பணம் செலுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
அவர்களது இணையம்வழி பரிவர்த்தனைகளும் 2018ல் 38 விழுக்காட்டிலிருந்து 2022ல் 78 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது என்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட முதல் சிங்கப்பூர் மின்னிலக்க சமூகம் தொடர்பான அறிக்கை தெரிவித்தது.
விவரங்களைத் தேடுவதற்காக அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதும் 2020ல் 53 விழுக்காட்டிலிருந்து 2022ல் 86 விழுக்காட்டுக்கு கூடியுள்ளது.
மூத்தோர் ‘சிங்பாஸ்’ செயலியைப் பயன்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்களாக மாறி வருகின்றனர்.
2020ல் 41 விழுக்காடாக இருந்த அந்த விகிதம் 2022ல் 67 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது.
“சிங்பாஸ் செயலி வழியாக அதிக சேவைகளை பெற வேண்டியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் சிங்பாஸ் பயன்பாட்டை மூத்தோர் கற்றுக்கொள்ள சமூகமும் அரசாங்கமும் எடுத்துள்ள முயற்சிகள் மற்றொரு காரணம்,” என்று அறிக்கையை வெளியிட்ட தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
ஹார்ட்பீட்@பிடோக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிக்கை விவரம் வெளியிடப்பட்டது.
‘சீனியர்ஸ் கோ டிஜிட்டல்’ போன்ற திட்டங்கள் மூத்தோரின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த உதவியிருக்கிறது.
மின்னிலக்கப் பயன்பாடு, மின்னிலக்கத் திறன், அன்றாட வாழ்க்கையில் மின்னிலக்க தொழில்நுட்பங்கள் மீதான மக்களின் போக்கு ஆகியவற்றை அறிக்கை மதிப்பீடு செய்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் ஊக்கமூட்டுவதாக தெரிவித்தார்.
“இணையம்வழி சேவைகளையும் தாண்டி, கணினி, திறன்பேசிகளை மூத்தோர் பயன்படுத்துவது படிப்படியாக அதிகரித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ இயக்கத்தின் புரவலரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருமான அதிபர் தர்மன் சண்முகரத்தினம், “மூத்தவர்கள் தாங்கள் ஒரு புதிய உலகிற்கு மாற வேண்டும் என்று நினைக்கக்கூடாது,” என்றார்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விவரங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். துணியை உலர வைக்க பருவநிலையை அறிவது, எந்த நேரத்தில் பேருந்து வரும், பேரங்காடியில் எந்த பொருள் மலிவாக விற்கப்படுகிறது என்பன போன்றவை என்று அதிபர் தர்மன் கூறினார்.
ஆனால் மின்னிலக்க தொழில்நுட்பத்தில் மோசடிகளைக் கண்டறிவதில் மூத்தவர்கள் தன்னம்பிக்கையின்றி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 99 விழுக்காடு குடும்பங்களில் இணையத் தொடர்பு இருப்பதாகவும் சுமார் 97 விழுக்காட்டினர் சொந்தமாக திறன்பேசி வைத்திருப்பதாகவும் அறிக்கை தெரிவித்தது.
மூத்தோர் மட்டும் தங்கியுள்ள வீடுகளில் 2022ஆம் ஆண்டில் இணையத் தொடர்பு 93 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. 2017ஆம் ஆண்டில் இது, 55 விழுக்காடாக இருந்தது.
முழுநேரம் பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளிலும் 2018ஆம் ஆண்டிலிருந்து இணையத் தொடர்பு உள்ளது. இருந்தாலும் இரண்டு விழுக்காடு குறைவாக இருப்பதற்கு சில வீடுகளில் கணினி வாங்க வசதியில்லாதது காரணமாகும்.
இத்தகைய குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ‘DigitalAccess@Home’ என்ற திட்டத்தின்கீழ் மின்னிலக்க வசதிகளைப் பெறுவதற்காக ஆணையம் மானியம் வழங்கி வருகிறது.
இவர்களுக்கு உதவ, வீட்டிலிருந்து கற்றலை ஆதரிக்கும் கல்வி அமைச்சின் திட்டமும் ஏற்கெனவே நடப்பில் உள்ளது.
குறைந்த வருமானமுள்ள மூத்தோருக்கும் மின்னிலக்க வசதிக்காக ஆணையம் ஆதரவு அளித்து வருகிறது.
பதினெட்டு முதல் 59 வயதுக்குட்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களும் திறன்பேசியை வைத்துள்ளனர். முதியவர்களில் அதிகமானோர் திறன்பேசி வைத்துள்ளனர். 2017ல் 74% முதியோர் திறன்பேசியைப் பயன்படுத்தினர். இது, படிப்படியாக அதிகரித்து 2022ல் 89 விழுக்காடு மூத்தோரிடம் திறன்பேசி உள்ளது.
பெரும்பாலான சிங்கப்பூரர்கள் மின்னிலக்க தொழில்நுட்பம் தங்களுடைய வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்பதை ஒப்புக் கொண்டனர். அதே சமயத்தில் தவறான தகவல், மோசடி போன்ற அபாயங்கள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.