யூனோசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 33 வயது மாதும் ஒரு வயதுக் குழந்தையும் மாண்டு கிடந்தனர்.
புளோக் 35 யூனோஸ் கிரசெண்ட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து பிற்பகல் 12.40 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த மாதும் அக்குழந்தையும் அசைவின்றிக் கிடந்தனர். சம்பவ இடத்தில் அவர்கள் இறந்துவிட்டதாகக் காவல்துறை கூறியது.
அந்த மாது, அக்குழந்தையின் தாயார் என நம்பப்படுவதாக சீன நாளிதழ் சாவ்பாவ் தெரிவித்தது.
பலத்த சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே சென்று பார்த்தபோது, இருவர் புளோக்கில் இருந்து கீழே விழுந்துக் கிடந்ததை தாம் கண்டதாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் சாவ்பாவ் நாளிதழிடம் கூறினார்.
அந்த மாது குப்புற விழுந்துக் கிடந்ததாகவும் அக்குழந்தை அணையாடை (டயப்பர்) அணிந்திருந்ததாகவும் அவர் சொன்னார்.
சம்பவ இடத்தில் இரு நீல நிற கூடாரங்கள் கண்டறியப்பட்டதாக சாவ்பாவ் குறிப்பிட்டது.
அந்த புளோக்கின் நான்காவது மாடியில் இருக்கும் வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வீட்டில்தான் அந்த மாதும் அக்குழந்தையும் வசித்ததாக நம்பப்படுகிறது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவர்களது மரணத்தில் சூது எதுவும் இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை.