அசைவற்ற நிலையில் ஆடவர் ஒருவர் புக்கிட் மேரா வியூ வீவக வீட்டில் சனிக்கிழமை (நவம்.4) கிடந்தார். காவல்துறைக்கு காலை 9.15மணிக்கு தகவல் கிடைத்தது.
அவர் இறந்துவிட்டார் என்று அங்கு சென்ற காவல் துறையினர் தெரிவித்தனர். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்பதால் விசாரணை தொடர்கிறது. இறந்தவருடன் 55 வயது ஆடவர் ஒருவரும் வீட்டில் இருந்திருக்கிறார். போதைப் புழக்க குற்றம் புரிந்த சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தியை அறிந்த அவரின் மூத்த சகோதரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மறைந்த ஆடவர் திருமணமாகாதவர், துப்புரவுப் பணியாளர் எனவும் உணவு விநியோகப் பணியாற்றும் ஒருவருடன் அவ்வீட்டில் வாழ்ந்துவந்தார் என்றும் கூறினார்.
அந்த வாடகை வீட்டுக்குச் செல்லக்கூடிய பாதையை காவல் துறை தடுப்புகள் வைத்து மறைத்துள்ளதாகவும், ஆடவர் ஒருவரை அதிகாரிகள் விசாரிப்பதாகவும் ஷின்மின் சீன நாளிதழ் தெரிவித்தது.