தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023 முற்பாதியில் இடைநிலை வருமானம் 4.5% சரிவு

2 mins read
374d0ed9-c7e4-4af6-9283-161d82e5e952
பல துறைகளிலும் உள்ள ஊழியர்கள் பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வருமானச் சரிவை உணர்ந்துள்ளனர் என்று அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணவீக்கத்தின் பாதிப்பை உள்ளடக்கிய இடைநிலை வருமானம் 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.5 விழுக்காடு குறைந்துள்ளது.

அதிகரித்துள்ள பணவீக்கமும் பலவீனமான பொருளியல் எதிர்பார்ப்பும் இதற்கு காரணம் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது செவ்வாய்க் கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பலதரப்பட்ட துறைகளில் உள்ள ஊழியர்களை இந்தச் சரிவு பாதித்துள்ளது. இதனை அவர்களும் உணர்ந்துள்ளனர் என்றார் அவர்.

ஆனால் பணவீக்கம் கணக்கில் சேர்க்கப்படாத வழக்கமான சராசரி வருமானம் ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு முதல் பாதியில் மதிப்பிட்டபடி 0.9 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஊழியர்களின் வருமான வளர்ச்சியில் விலைவாசி உயர்வு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கேட்டதற்கு அமைச்சர் பதிலளித்தார்.

இந்தப் புள்ளிவிவரம், முழு நேரம் பணியாற்றும் சிங்கப்பூரர், நிரந்தரவாசிகளின் வருமானத்தை குறிப்பிடுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊதிய ஆதாயங்களை அவர்கள் அடைந்துள்ளனர்.

அவர்களின் பணவீக்கத்தை உள்ளடக்கிய வருமானம் 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரை 9.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது அல்லது ஆண்டுக்கு 1.8 விழுக்காடு கூடியது.

கீழ்நிலையில் உள்ள இருபது விழுக்காடு ஊழியர்களின் பணவீக்கத்தை உள்ளடக்கிய வருமானம் இடைநிலையைவிட அதிக வளர்ச்சி அடைந்தது. 2017 முதல் 2022 வரை அவர்களின் வருமானம் ஆண்டுக்கு 2.9 விழுக்காடு அதிகரித்தது என்றார் அமைச்சர் ஸாக்கி.

இதேபோன்று உற்பத்தித் திறனும் இதே காலக்கட்டத்தில் ஆண்டு அடிப்படையில் இரண்டு விழுக்காடு விகிதத்தில் வளர்ச்சி அடைந்தது.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டால் இவ்வாண்டின் எஞ்சிய காலத்தில் பணவீக்கம் மிதமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார்.

அதாவது, பணவீக்கத்தை உள்ளடக்கிய வருமானச் சரிவு மிதமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம். இருந்தாலும் பல துறைகளில் அது அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“பயணத் துறை மீண்டு வருவதால் அதன் தொடர்பான துறைகளில் சம்பள உயர்வு நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் உழைப்பு மிகுந்த சேவைத் துறையில் மனிதவளப் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கும்,” என்று அமைச்சர் ஸாக்கி மேலும் தெரிவித்தார்.

கடந்த அக்டோபரில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில். அடுத்த ஆண்டில் பணவீக்கம் மெதுவடையும்போது பொருளியல் வளர்ச்சி சூடு பிடிக்கும் என்று அது கூறியிருந்தது.

தேசிய சம்பள மன்றமும் அண்மைய அறிக்கையில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளதால் குறைந்த வருமான ஊழியர்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் ஒரு தொகையை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

அரசாங்கம், $1.1 பில்லியன் வாழ்க்கைச் செலவு ஆதரவு தொகுப்பின் ஒரு பகுதியாக தகுதிபெற்ற சிங்கப்பூரர்களுக்கு கூடுதல் வழங்குதொகை வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பரில் அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்