நாட்டு நாய்களுக்கு வலைவீச்சு

நாட்டு நாய்களுக்கு வலைவீச்சு

2 mins read
25725877-5adf-4320-9e0d-4dce6e275612
பாசிர் ரிஸ் பூங்காவில் நாய்கள் துரத்தியதால் தப்பிய ஓடிய நபர். - படம்:  டிக்டோக் காணொளி

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் சுற்றித் திரியும் நாட்டு நாய்களுக்கு விலங்குநல மருத்துவ சேவை (ஏவிஎஸ்) அமைப்பு வலைவீசியிருக்கிறது.

திங்கட்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஏவிஎஸ் அமைப்பின் டாக்டர் சங் சியோவ் ஃபூங், பாசிர் ரிஸில் நடந்துள்ள சம்பவத்தை தேசிய பூங்காக் கழகத்தின்கீழ் இயங்கும் ஏவிஎஸ் அறிந்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை பாசிர் ரிஸில் உள்ள பூங்காவில் மெதுநடை சென்றுகொண்டிருந்த ஒருவரை நாய்கள் விரட்டிச் சென்றதால் பலர் அதிர்ச்சியடைந்தனர்.

“சுதந்திரமாக சுற்றித் திரியும் நாய்கள் பிடிபட்டதும் டிஎன்ஆர்எம் திட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படும்,” என்று டாக்டர் சோங் குறிப்பிட்டார்.

டிஎன்ஆர்எம் எனும் திட்டம், நாய்களைப் பிடித்து, கருத்தடைச் செய்து, மறுவாழ்வு இல்லத்தில் வைக்கவும் பாதுகாப்பான இடத்தில் விடுவிக்கவும் அல்லது நிர்வகிக்கவும் உதவுகிறது.

சமூக ஊடகத்தில் பரவிய டிக்டோக் காணொளியில் பாசிர் ரிஸ் டிரைவ் 3ல் உள்ள பூங்காவில் நாய்கள் நின்றுகொண்டிருக்கும் தாழ்வானப் பகுதிக்கு அருகே ஒருவர் மெதுநடை செல்வதை பார்க்க முடிகிறது. அப்போது அவரை நோக்கி குரைக்கும் நாய்கள் துரத்திச் செல்கின்றன. நாய்களிடமிருந்து தப்பிக்க அவரும் ஓட்ட மெடுக்கிறார்.

இந்தக் காணொளி ஞாயிற்றுக் கிழமை பதிவேற்றப்பட்டது. அப்போது முதல் 55,000க்கும் மேற்பட்டோரை இந்தக் காணொளி ஈர்த்துள்ளது.

மறுவாழ்வு இல்லத்தில் வைக்க முடியாத நாய்கள் அதற்குரிய இடங்களில் விடுவிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இடங்கள் குடியிருப்பு வட்டாரங்களிலிருந்து வெகுதொலைவில் இருக்கும். இயற்கையான சூழலில் நாய்கள் வசிக்க அவ்வாறு செய்யப்படுகிறது என்று டாக்டர் சாங் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 3,900க்கும் மேற்பட்ட சுற்றித் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்