சட்டத்துறைப் பட்டதாரிகளுக்கான பயிற்சிக் காலத்தை இரட்டிப்பாக்க நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
குறைந்தது ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு, தற்காலிகமாகத் தொழில் புரியும் சான்றிதழுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தச் சான்றிதழை வைத்திருக்கும் பயிற்சி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கட்சிக்காரர்களைப் பிரதிநிதிக்கலாம்; மேற்பார்வைக்கு உட்பட்ட நிலையில் கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்.
“இந்தப் புதிய திருத்தங்களின்கீழ் சட்டத்துறைப் பட்டதாரிகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் பயிற்சிக் காலத்தைத் தொடங்குவர். பயிற்சிக் காலத்தை முடித்ததும், வழக்கறிஞராகச் செயல்பட அவர்கள் கூடுதல் திறன்களைப் பெற்றிருப்பர்,” என்று சட்ட, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் கூறினார்.