அரசாங்க அதிகாரிகள் போல நடித்து மோசடி; 18 பேர் கைது, 21 பேரிடம் விசாரணை

அரசாங்க அதிகாரிகள் போல நடித்து மோசடி; 18 பேர் கைது, 21 பேரிடம் விசாரணை

2 mins read
881c8708-1e43-483a-a337-423d058d50a6
போலி அடையாள அட்டை, சிம் அட்டைகள் உட்பட பலவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

அரசாங்க அதிகாரிகள் போல நடித்து மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 21 பேர் விசாரணை வளையத்தின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வயது 16 முதல் 55 வரையிலானது.

அக்டோபர் 21 முதல் நவம்பர் 6 வரை தீவு முழுவதும் மோசடிக்கு எதிராக சோதனைகள் நடத்தப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காவல்துறை தெரிவித்தது.

அரசாங்க அதிகாரிபோல நடித்த மோசடிக்காரர்களிடம் ஒருவர் 90,000 வெள்ளிக்குமேல் இழந்ததாக அக்டோபர் 21ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் வந்தது.

இதையடுத்து காவல்துறை விசாரணையில் இறங்கியது. அந்தப் பணம் அதே நாளில் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக காவல்துறை மிகச் சிக்கலான வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளை ஆராய வேண்டியிருந்தது.

இதற்கு ஒரு நாள் முன்பு அக்டோபர் 20ஆம் தேதி ஆடவர் ஒருவருக்கு அழைப்பு வந்தது. டிபிஎஸ் வங்கியிலிருந்து அழைப்பதாக ஒரு பெண் கூறியிருந்தார்.

டிபிஎஸ் வங்கி கணக்கிலிருந்து யுஒபி வங்கிக் கணக்கு உங்களுடைய பணத்தை மாற்ற மூன்று முறை முயற்சி நடைபெற்றதாக அந்தப் பெண் கூறினார்.

இது பற்றி தமக்குத் தெரியாது என்று அந்த ஆடவர் கூறினார்.

இருந்தாலும் இந்த விவகாரம் பற்றி சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் தெரிவிக்கப்படும் என்று அந்தப் பெண் கூறினார்.

அதன் பிறகு நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள் என்று கூறி அந்த நபரைத் தொடர்புகொண்டனர்.

“கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்காக உங்கள் வங்கிக் கணக்கில் 80,000 வெள்ளி மாற்றப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உங்களுடைய கடன் அட்டையை வைத்திருந்தார்”, என்று மோசடிக்காரர்கள் அவரிடம் கூறினர்.

மோசடிக்காரர்களில் ஒருவர், போலி காவல் அதிகாரி அட்டையையும் வாட்ஸ்அப் வழி அனுப்பியிருந்தார்.

மற்றொருவர் தன்னை ஒருவர் புலன் விசாரணை அதிகாரி என்று கூறியிருந்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக ஓசிபிசி பாதுகாப்பு கணக்கு ஒன்றுக்குப் பணத்தை மாற்ற வேண்டும் என்றும் மோசடிக்காரர்கள் கூறியிருந்தனர். இதனை நம்பி அந்த ஆடவர் 90,000 வெள்ளியை அந்தப் பாதுகாப்புக் கணக்குக்கு மாற்றினார்.

அதன் பிறகு சந்தேகமடைந்த ஆடவர், காவல்துறையில் புகாரளித்தார்.

இதையடுத்து வர்த்தக விவகாரப் பிரிவின் அதிகாரிகள் தீவு முழுவதும் விசாரணை நடத்தி 12 சந்தேக நபர்களைக் கைது செய்தனர். 21 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை ஐந்து பேர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குறைந்தது ஐந்து கைப்பேசிகள், 90க்கும் மேற்பட்ட சிம் அட்டைகள், 80 வங்கி அட்டைகள் மற்றும் வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆறாவது நபர் மீதும் குற்றம் சுமத்தப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்