போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஏழு ஆடவர்கள் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய இரண்டு அதிரடிச் சோதனைகளில் இவர்கள் பிடிபட்டனர்.
ஏறத்தாழ 2.5 கிலோ போதைமிகு அபினும் 198 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தோராய மதிப்பு $319,000 என்றும் அது ஒரு வாரத்தில் 1,280 போதைப் பித்தர்கள் பயன்படுத்தும் அளவு என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் 40 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் யூனோஸ் கிரசெண்ட் வட்டாரம் அருகே கைது செய்யப்பட்டனர்.
53 வயது ஆடவர் ஒருவரும் அந்த வட்டாரத்தில் கைது செய்யப்பட்டார்.
மற்றோரு அதிரடிச் சோதனையின்போது பூன் கெங் எம்ஆர்டி நிலையம் அருகே 68 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் 17 கிராம் போதைமிகு அபின் கண்டெடுக்கப்பட்டது.
அதனை அடுத்து, பென்டமியர் வட்டாரம் அருகில் 67 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அருகில் இருந்த வீட்டில் அந்த ஆடவர் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

