தற்காப்பு வழக்கறிஞர் ‘வழக்கத்திற்கு மாறாக நிகழ்ந்த ஒரு விபத்து’ என்று வருணித்ததன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவரின் கட்சிக்காரருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் வாகனம் ஓட்ட எட்டாண்டுத் தடையும் விதிக்கப்பட்டன.
தன் வாகனத்தை முன்னாள் டாக்சி ஓட்டுநரான டான் யு செங், 70, பாய லேபார் ஸ்குவேர் கடைத்தொகுதியின் டாக்சி நிறுத்தத்திற்கு ஓட்டிச்சென்று காத்திருந்தபோது தூங்கிவிட்டார். தூக்கம் கலைந்து கண்விழித்தவர், முன்னால் இருந்த டாக்சிகள் நகர்ந்துவிட்டதை உணர்ந்து தன் வாகனத்தின் வேகத்தை முடுக்கிவிட மிதித்தபோது வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இதனால், வாகனம் அதிவேகத்தில் பாய்ந்து அருகில் இருந்த மூன்று மோட்டார்சைக்கிள்கள் மீதும் அவற்றுக்கிடையே நின்றிருந்த 51 வயது ஆடவர் ஒருவர் மீதும் மோதிவிட்டது.
வாகனம் மோதியதால் மேல்நோக்கிப் பறந்து தரையில் விழுந்தார் அந்த 51 வயது ஆடவர். அவருக்கு ஏற்பட்ட காயங்களால் அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து அவர் இறந்தும் போனார்.