உணவுக் கழிவைக் குறைக்கும் நோக்கில் புதிதாக இரண்டு ‘அறிவார்ந்த’ சமூகக் குளிர்பதனப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 11ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் ஒரு குளிர்பதனப் பெட்டி, டோ யி டிரைவ் பகுதியிலும் மற்றொன்று புக்கிட் கோம்பாக்கின் குய்லின் வட்டாரத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
சமூகக் குளிர்பதனப் பெட்டிகளைப் பராமரிப்பதற்கான மனிதவளமும் இத்திட்டத்தின் மூலம் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணி ஆகஸ்ட் மாதம் தொடங்கிவைத்த இந்த முன்னோடித் திட்டத்தில் இணைவதற்கு ஏறத்தாழ 500 குடியிருப்பாளர்கள் விண்ணப்பத்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஐந்து உணவுப் பொருள்கள் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதற்கு அதிகமாகக் குடியிருப்பாளர்கள் எடுப்பதைக் கண்காணிக்க, குளிர்பதனப் பெட்டியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சமூகக் குளிர்பதனப் பெட்டிகளைக் குடியிருப்பாளர்கள் நாடும்போது, வரிசையில் தங்கள் முறை வரும்வரை காத்திருந்து பின்னர் தொண்டூழியர்களிடமிருந்து உணவையும் பானத்தையும் பெற்றுக்கொள்ளும் நிலை உள்ளது.
இருப்பினும், இணையத்தின் வழி தங்களுக்கென கணக்கு தொடங்கியுள்ள குடியிருப்பாளர்கள் புதிய குளிர்பதனப் பெட்டிகளை எந்நேரத்திலும் நாடும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
குளிர்பதனப் பெட்டியின் கதவில் உள்ள கியூஆர் குறியீட்டை வருடி குடியிருப்பாளர்கள் இவ்வாறு கணக்கைத் தொடங்கலாம்.
இணையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து 10 நாள்களுக்குள் குடியிருப்பாளரது கணக்கு தொடங்கப்படும்.