பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான யாவ் ஷின் லியோங் காலமானார் என்று செவ்வாய் இரவு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு தெரிவித்தது.
ஃபேஸ்புக் பக்கத்திலும் லிங்கிடின் கணக்கிலும் அவரது இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திரு யாவ் நவம்பர் 10ஆம் தேதி காலமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு வயது 47.
அவர் இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஃபேஸ்புக் கணக்கு ‘அமோஸ் ராவ்’ என்ற பெயரில் இருந்தது. இது, யாவ்வின் பெயராகும். 2011, 2012ஆம் ஆண்டுகளில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
“எங்களுடைய இதயமே நொறுங்கிவிட்டது. எங்களைவிட்டு இவ்வளவு சீக்கிரம் திடீரென பிரிந்துவிட்டீர்கள்,” என்று ஒருவர் தமது பதிவில் தெரிவித்திருந்தார்.
“உங்களுடைய திடீர் பிரிவு எங்களுடைய இதயத்தில் நிறைவு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களுடைய இதயங்களில் எப்போதும் நீங்கள் நீங்காமல் இருப்பீர்கள்,” என்றது மற்றொரு பதிவு.
திரு யாவ் அன்பான கணவர், தந்தை, சகோதரர், தலைவர், வீரர் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திரு யாவ் 2011ல் ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். ஆனால் 2012ல் தகாத உறவு பற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் பாட்டாளிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டில் தன்னை அமோஸ் ராவ் என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவுகளை அவர் வெளியிட்டார்.
ஒரு பதிவில், தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்காக பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங்கை அவர் விமர்சித்திருந்தார்.