சிங்கப்பூர், நவீன குடிநுழைவுச் சோதனை முறையைப் பரிசீலித்து வருகிறது.
தற்போது, பயணிகள் சிங்கப்பூர் எல்லையைக் கடந்து செல்லும்போது தங்களுடைய கடவுச்சீட்டை வருட வேண்டும். பின்னர் தடுப்புகள் திறப்பதற்காகக் காத்திருந்து அங்க அடையாளச் சோதனைகளைச் செய்ய வேண்டும்.
இதற்குக் குறைந்தது இரண்டு நிமிடங்களாகின்றன.
புதிய முறையில் நிற்காமல் நடந்து சென்று குடிநுழைவுச் சோதனைகளை முடிக்கலாம்.
பத்து வினாடிகளே இதற்கு தேவைப்படும்.
அடுத்த தலைமுறை குடிநுழைவுச் சோதனை என்று அழைக்கப்படும் முறையில் தடுப்புகள் இருக்காது. பயணிகள் தாங்களாகவே அங்க அடையாளச் சோதனைகளை செய்ய ஒரு முகப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் புதிய முறையை உள்துறை குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவை (எச்டிஎக்ஸ்) உருவாக்கி வருகிறது.
2023 பாரிஸ் மிலிபோலில் நவம்பர் 14 முதல் 17 வரை நடைபெறும் கண்காட்சியில் நவீன முறையை சிங்கப்பூர் காட்சிப்படுத்தியிருக்கிறது.
பாரிஸ் கண்காட்சி, உலகின் ஆகப்பெரிய உள்துறை, பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றாகும்.
இதில், சிங்கப்பூர் எச்டிஎக்ஸ் பேராளர்கள், அறிவியலாளர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும் கண்காட்சியில் பங்கேற்றார்.
அடுத்த தலைமுறைக்கான குடிநுழைவுச் சோதனை கோட்பாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டதாக எச்டிஎக்ஸ் அங்க அடையாளச் சோதனைப் பிரிவின் துணை இயக்குநர் மெல்வின் லோ தெரிவித்தார்.
“நாங்கள் தொடர்ந்து தொழில்நுட்ப எல்லைகளைத் தாண்டி புத்தாக்க வரம்புகளை மீறி செயல்பட விரும்புகிறோம்,” என்றார் அவர்.