சமூகத்தில் உள்ள மூத்தோர் சிறப்பான முறையில் தங்களது இல்லத்திலேயே முதுமையை எட்ட சிங்கப்பூர் $800 மில்லியன் மதிப்பீட்டில் புதிய திட்டத்தை வகுத்து உள்ளது.
அதிகமானோருக்குப் பலனளிக்கவும் தங்களது திட்டங்களின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கவும் மூத்தோர் நடமாட்ட நிலையங்களுக்கு அந்தத் தொகை கைகொடுக்கும்.
சிறப்பான முறையில் முதுமையை எட்டுவதற்கான ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ திட்டத்திற்கு பல அமைச்சுகள் ஆதரவளிக்கின்றன. அதுபற்றிய விவரங்களையும் நிதி ஒதுக்கீடு பற்றிய தகவலையும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வியாழக்கிழமை வெளியிட்டார்.
“தனிமையும் சமூகத்தில் ஒன்றிணையாததும் பல மூத்தோருக்கு ஆகப் பெரிய எதிரிகளாக திகழ்கின்றன. மூத்தோரின் உடல்நிலை மோசமடைய அவையும் காரணங்கள்.
“எனவேதான், அவர்கள் சமூகத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்றார் அமைச்சர் ஓங்.
புக்கிட் பாரு வட்டாரத்தின் லெங்கோக் பாருவில் உள்ள என்டியுசி சுகாதார மூத்தோர் நடமாட்ட நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு வருகை அளித்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
‘ஏஜ் வெல் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் வீடமைப்பும் வீதிகளும் மேம்பாடு காண உள்ளன. இந்தத் திட்டத்தை தேசிய வளர்ச்சி அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து வழிநடத்தும்.
சிங்கப்பூர் மக்கள்தொகை வேகமாக முதுமையடைந்து வருகிறது. 2030ஆம் ஆண்டுவாக்கில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 900,000 பேர் சிங்கப்பூரில் இருப்பார்கள்.
அதேநேரம் தனிமையில் வசிக்கும் மூத்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு மூத்தோர் நடமாட்ட நிலையத்திற்கும் $400,000 அளிப்பதன் மூலம் அவற்றுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி குறைந்தபட்சம் 50 விழுக்காடு அதிகரிக்கும்.
திரு ஓங் செய்தியாளர்களிடம் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான மூத்த வருகையாளர்களை மூத்தோர் நடமாட்ட நிலையங்கள் சமாளிப்பது என்பது கடினமானது அல்ல.
“அந்த நிலையம் அமைந்துள்ள வட்டாரத்தைச் சுற்றி உள்ள பெரும்பான்மை மூத்தோரை நாடுவதும் அவர்களை பயனுள்ள வழிகளில் ஈடுபடுத்துவதும்தான் மிகவும் கடினமான செயல்கள்,” என்றார்.