உலக வர்த்தகப் போக்கு மின்னிலக்கமயமாகி வருவதால் சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் உள்ள சிறிய நிறுவனங்கள் பலனடையும் என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி தெரிவித்து உள்ளது.
பொருள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியும் இறக்குமதியும் மின்னிலக்க உருமாற்றம் கண்டு வருவதால் அதன் மூலம் ஒட்டுமொத்த விநியோகத் தொடரில் வாய்ப்புகள் குவியும் என்று அந்த வங்கியின் மூத்த நிர்வாகி பேட்ரிக் லீ கூறியுள்ளார்.
“இதற்கு முன்னர், வர்த்தகப் பணிகள் தானியக்கமற்ற முறையில், காகித ஆவணங்களின் அடிப்படையில் நடைபெற்றன. வர்த்தகங்கள் அதிகம் நடைபெற்றபோதிலும் அது பாதுகாப்பானதாக இல்லை.
“தற்போது எல்லாம் மின்னிலக்கத்தில் நடைபெறுவதால் வர்த்தகர்கள் எங்கிருந்து பொருள்கள் வருகின்றன, எங்கு தங்களது பொருள்கள் செல்கின்றன என்பனவற்றையும் அந்தப் பொருள்கள் செல்லும் வழிகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளக் கூடிய வசதி ஏற்பட்டு உள்ளது,” என்று அவர் கூறினார்.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் சிங்கப்பூர் மற்றும் ஆசியான் சந்தைகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியான திரு லீ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசுகையில், “மின்னிலக்கமயம் ஆற்றலை அதிகரித்து செலவைக் குறைப்பதால் அதன் மூலம் வர்த்தகர்கள், குறிப்பாக சிறு, நடுத்தர வர்த்தகர்கள் அதிக பலனடைய முடியும்,” என்றார்.

