உணவு பாதுகாப்பை ஊக்குவித்தல், சுத்தமான தண்ணீர் தொழில்நுட்பத்தில் தொடர் முதலீடு போன்ற சிங்கப்பூரின் பற்பல முயற்சிகள் முழுமையடைவதை சுற்றுப்புறச்சூழல் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் திருவாட்டி ஷகுரா பஷீர், 33, நேரடியாகக் கண்டுள்ளார்.
இயற்கை அன்னையின் சக்தியை பயன்படுத்தி, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது உயிரினங்களை அழிவிலிருந்து காப்பது ஆகிய இரட்டை சவால்கள் முனைவர் பட்டப் படிப்பு மாணவரான அவரை மிகவும் கவர்ந்துள்ளது.
இயற்கை பாதுகாப்பு, காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்தவற்றை நிலையான வகையில் நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகள் பருவநிலை நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையலாம். கரியமில வாயுவின் கசிவை வளிமண்டலத்தில் இருந்து சிறிது சிறிதாக அகற்ற, மரம் செடி கொடி, தாவரங்கள் வளர்கின்ற மண்ணிலும் வேர்களிலும் இயற்கையாக அந்த வாயுவை தக்கவைத்துக்கொள்வது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
சதுப்பு நில பாதுகாப்பு அவற்றைச் சுற்றியுள்ள கடல் மட்ட உயர்வை கட்டுப்படுத்தல், காடுகளில் உள்ள மரங்களின் நிழல் வழங்கும் குளிர்ச்சியை நிலைநிறுத்தல் போன்ற பூமியின் வெப்பத்திலிருந்து இயற்கை வளங்களை பாதுகாக்க உதவும். இந்த இயற்கை வளங்களே உயிரினங்களின் விரித்தியை, உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்து, அனைவருக்கும் வாழ்விடம் அமைத்துத்தருகின்றன.
“நகரமயமாதலின் அவசியத்தால் , லாபகரமான தொழில்களான மரம் வெட்டுதல், பணை எண்ணெய் விற்பனை போன்ற வியாபார வர்த்தகங்கள் வளர்ச்சியடைந்து பல்லுயிர்கள் செழிப்புடன் வாழும் இடமான காடுகள் அழிக்கப்படுகின்றன” என்று தேசிய பல்கலைக்கழகத்தின் இயற்கை சார் பருவநிலை தீர்வுகள் நிலையத்தில் தனது முனைவர் பட்டக் கல்வியைத் தொடரும் திருவாட்டி ஷகுரா கூறினார்.
தென் கிழக்காசியாவில் இந்த பிரச்சினை மிகவும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆண்டுதோறும், 1.2 விழுக்காடு காடுகளை விவசாயம், உணவு மற்றும் கனிம வளம் மற்றும் மூலப் பொருள் தேவைகளுக்காக இந்த வட்டாரம் இழந்து வருகிறது.