நவம்பர் 30ஆம் தேதி முதல் மோசடிகளில் இருந்து உறுப்பினர்களைப் பாதுகாக்க இணையம் வழியாக மத்திய சேம நிதியிலிருந்து ஒருநாளைக்கு $2,000 மட்டுமே எடுக்க முடியும் என வரம்பு விதிக்கப்படவுள்ளது.
மசே நிதி உறுப்பினர்கள், இணையம் வழியாகப் பணம் எடுக்கும் வரம்பை 2,000 வெள்ளியிலிருந்து மாற்ற விரும்பினால், இணையத்தைப் பயன்படுத்தி எந்நேரத்திலும் $0 முதல் $200,000 வரை அதனை மாற்றிக்கொள்ளலாம்.
மோசடிகளில் சிக்காமல் இருக்க உறுப்பினர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கிட, நவம்பர் 30ஆம் தேதி முதல் 55 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர் அனைவருக்கும் இணையத்தில் தினசரி பணம் எடுக்கும் வரம்பு ஒரு நாளைக்கு $2,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பணம் எடுக்கும் வரம்பை உயர்த்திக்கொள்ள விரும்புவோர், சிங்பாஸ் வழி முக அடையாளத்தை மறுஉறுதி செய்துகொள்ளவேண்டும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையை தடுத்து மறிபரிசீலனை செய்துகொள்ள, கூடுதலாக 12 மணிநேரம் அவகாசம் வழங்கப்படும் என்று மசே நிதிக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பரிவர்த்தனையைச் செய்ய விரும்பாதோர், மசே நிதி பணம் எடுக்கும் வசதியை CPF Withdrawal Lock என்பதன் வழியாக நிறுத்திக்கொள்ளலாம். அதன்படி தினசரி பணம் எடுக்கும் வரம்பு $0 நிலைக்கு வந்துவிடும். இவ்வகையில் இணையத்தில் பணம் எடுப்பதை நிறுத்திக்கொள்வோர் நேரடியாக மட்டுமே மசே நிதி சேவை நிலையங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
மீண்டும் இணையத்தில் பணம் எடுக்கும் பரிவர்த்தனை செய்ய விரும்பும் உறுப்பினர்கள், சிங்பாஸ் மறைச்சொல்லைப் பயன்படுத்தி, தங்கள் முக அடையாளத்தை மறுஉறுதி செய்தபின் 12 மணி நேரம் காத்திருக்கவேண்டும்.
நவம்பர் 30 முதல், உறுப்பினர்கள் தங்கள் தொடர்பு விவரங்களை மசே நிதிக் கழகத்திற்கு தெரிவிக்கும்போதும் முக அடையாளத்தை மறுஉறுதிசெய்யவேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்க்க அப்போதும் அந்த 12 மணிநேரக் காத்திருப்பு தேவைப்படும்.
டிசம்பர் மாத இறுதிக்குள் வங்கி கணக்கில் மாற்றங்கள் இருந்தால், அதற்கும் சிங்பாஸ் மற்றும் முக அடையாள உறுதிப்பாடு தேவைப்படும். புதிய கணக்கைத் திறக்கும் உறுப்பினர்களின் விவரங்களை உறுதிசெய்ய வங்கிக்கு 2 நாள்கள் தேவைப்படும். அதன்பிறகு கணக்குகள் செயல்படத் தொடங்கும்.
மசே நிதி பணம் இணைய மோசடியின் வழி திருடப்படுவதைத் தவிர்க்கவே பணம் எடுக்க தினசரி வரம்பு ஏற்படுத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அனைத்து மசே நிதி உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் சரிபார்த்து , விவரங்கள் உறுதிசெய்யப்பட்ட பிறகே பணம் எடுக்கமுடியும். பரிவர்த்தனை நடந்து பணம் எடுக்கப்பட்டதும் உறுப்பினர்களுக்கு உடனே தெரிவிக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணம் எடுத்தல், உறுப்பினர் விவரங்கள் அல்லது வங்கிக் கணக்கைச் சரிசெய்தல், தினசரி பணம் எடுக்கும் வரம்பை மாற்றுதல் போன்ற எந்த நடவடிக்கையைச் செய்தாலும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் உறுப்பினருக்கு அனுப்பப்படும்.
மசே நிதி சேமிப்பு சார்ந்த மோசடியில் சிக்கியதாக சந்தேகப்பட்டால், உறுப்பினர்கள் மசே நிதிக் கழகத்தை தொடர்புகொள்ளவேண்டும். உறுப்பினர்கள் வங்கியைத் தொடர்புகொண்டு கணக்கை முடக்கிவிடவேண்டும். மேலும் அவர்களது சிங்பாஸ் மறைச்சொல்லை மாற்றி, தினசரி பணம் எடுக்கும் வரம்பை $0 அளவுக்கு வைத்துக்கொள்ள வேண்டும். உடனே காவல்துறைக்கு புகார் அளிக்கவேண்டும் எனவும் அறிக்கை அறிவுறுத்தியது.