டெங்கியைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டு முற்பாதியிலிருந்து மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகள் இணையவுள்ளன.
வொல்பாக்கியா திட்டத்தின்கீழ் நோயைப் பரப்பக்கூடிய கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்கள் வெளியே விடப்படுகின்றன.
தற்போது நடந்துவரும் கள ஆய்வுகளில் ஆக்ககரமான முடிவுகள் தெரிய வந்துள்ளதை அடுத்து புக்கிட் மேரா-தெலுக் பிளாங்கா, கிளமெண்டி-வெஸ்ட் கோஸ்ட், காமன்வெல்த், ஹாலந்து, மரின் பரேட்-மவுண்ட்பேட்டன் ஆகிய குடியிருப்புப் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
2024ன் முதல் காலாண்டு முதல் ஆண் வொல்பாக்கியா பாக்டீரியாவைக் கொண்ட ஏடிஸ் கொசுக்கள் இந்த ஐந்து குடியிருப்புப் பகுதிகளில் வெளியே விடப்படும்.
தற்போது திட்டத்தின்கீழ் 350,000 வீடுகள் பலனடைந்து வருவதை அடுத்து ஐந்து இடங்களுக்குத் திட்டம் 2024ல் விரிவுபடுத்தப்படும் நிலையில் 480,000 வீடுகள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தரைவீடுகள் உள்பட சிங்கப்பூரிலுள்ள அனைத்து வீடுகளில், 35 விழுக்காடு இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் என்று நம்பப்படுகிறது.
திட்டத்தின் விரிவாக்கம் குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் நவம்பர் 21ஆம் தேதியன்று அறிவித்தபோது, “கடந்த நான்கு ஆண்டுகளில் வொல்பாக்கியா கொசுக்கள் வெளியே விடப்பட்டு ஓராண்டு காலமாவது ஆன பகுதிகளில் குடியிருப்போரில் 77 விழுக்காட்டினர் டெங்கியால் பாதிக்கப்படும் சாத்தியம் குறைந்திருந்தது,” என்றார்.
இவர் குறிப்பிட்ட பகுதிகளில் தெம்பனிஸ், ஈசூன் வட்டாரங்களும் அடங்கும்.
வரலாற்றுத் தரவுகள் அடிப்படையிலான டெங்கி அபாயம், ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை, ஆண் வொல்பாக்கியா ஏடிஸ் கொசுக்களை வளர்த்து வெளியே விடுவதற்கான தன் ஆற்றல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் தேசிய சுற்றுப்புற வாரியம் இந்த ஐந்து புதிய குடியிருப்புப் பகுதிகளைத் தெரிவுசெய்துள்ளதாகக் குறிப்பிட்டது.
திட்டத்தின்கீழ் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஆண் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு வாரியம் தரவுப் பகுப்பாய்வையும் செயற்கை நுண்ணறிவையும் ஒரு முன்னுரைப்புக் கருவியாகப் பயன்படுத்துவதாகவும் வாரியம் சுட்டியது.
2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வொல்பாக்கியா திட்டம், மே மாத நிலவரப்படி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்குப் பலனளித்துள்ளது.