பொது கழிவறைகளை மக்கள் தூய்மையாக வைத்துக்கொள்வதில் மேலும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் ஐந்தாவது ஆண்டு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
‘தூய்மையான பொது கழிவறைகள்’ இயக்கத்தை வாரியம் 2018ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்நிலையில், கழிவறையில் வேறு எவரும் இல்லாதபோதும் ஒருவர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பொதுமக்களிடையே 2023 இயக்கத்தின் வழியாக வாரியம் வலியுறுத்தவுள்ளது.
தரையும் கழிவறைத் தொட்டியில் உட்காரும் பகுதியும் ஈரமாக இல்லாததை மக்கள் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன் கழிவறையைப் பயன்படுத்துவோர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் பொத்தானை அழுத்த வேண்டும் என்றும் வாரியம் வலியுறுத்த விரும்புகிறது.
பொது சுகாதார மன்றம், சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், சிங்கப்பூர் பொது கழிப்பிடங்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவில் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஒன் பொங்கோல்’ உணவங்காடி நிலையத்தில் நவம்பர் 21ஆம் தேதியன்று நடைபெற்ற இயக்கத்தின் துவக்க விழாவில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் கலந்துகொண்டார்.
இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் உணவுக்கடைக்காரர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்தித்தும் பேசினார்.
“பொதுவாகவே ஒரு சிந்தனை மக்களிடையே இருப்பதைக் காணலாம். ஓர் இடம் அசுத்தமாக இருந்தால், அந்த இடத்தை மேலும் அசுத்தமாக்க மக்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் அந்த இடம் சுத்தமாக இருந்தால், அதை அசுத்தமாக்க மனம் வராது. அதனால் இந்த நல்லொழுக்கத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்த முயல்கிறோம். இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் பங்கை ஆற்ற வேண்டும்,” என்றார் திரு பே.
சிங்கப்பூரின் பொது கழிவறைகளின் நிலை குறித்து மக்களிடையே நல்லதோர் எண்ணம் இல்லாத நிலையில் இந்த இயக்கம் உருவெடுத்துள்ளது.