நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரை உள்ளடக்கிய ‘பிஎம்இ’ பிரிவினருக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கம் முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் ஊழியர் அணியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களை தொழிற்சங்கத் தலைமைக்கு தயார்ப்படுத்தவும் அது முயற்சிகளை எடுக்கவிருக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் உறுப்பினர்களின் ஊதியம், ஊழியர் நலன், வேலை வாய்ப்புகள் புத்தாக்க முறையில் அணுகப்படும். மேலும் ஒரே தொழில்துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் நெருக்கமாகச் செயல்பட ஏற்பாடு செய்யப்படும்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) தலைவர் இங் சீ மெங் நவம்பர் 22ஆம் தேதி இந்த மாற்றங்களை அறிவித்தார்.
பிஎம்இ மற்றும் தொழில்நுட்பர்களின் பங்கு ஏற்புடையதாக இருக்க தொழிற்சங்கங்களுக்கு இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று திரு இங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் ஊழியர் அணியில் பிஎம்இ பிரிவினர் அறுபது விழுக்காடு வரை அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது, 1990களின் ஆரம்பக்கட்டத்தில் இருந்த 30 விழுக்காட்டிலிருந்து கூடியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தொழிற்சங்க இயக்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிய அறிக்கையை தேசிய பேராளர்கள் மாநாட்டில் அவர் வெளியிட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய பேராளர் மாநாட்டில் என்டியுசி புதிய மத்திய குழுவைத் தேர்ந்தெடுத்து அடுத்த நான்கு ஆண்டுகால பயணத்துக்கான இலக்கை நிர்ணயிக்கிறது.
என்டியுசியின் தேசிய பேராளர் மாநாடு தற்போது ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் நடைபெற்று வருகிறது.