ஆபாச படங்கள், கருத்துகளைப் பகிரும் கணக்குகளை நீக்கும்படி சிங்கப்பூர் காவல்துறை விடுத்த கோரிக்கைகளுக்கு தகவல் செயலியான டெலிகிராம் பதிலளிக்கவில்லை என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவேலிங் புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், அண்மைக் காலமாக டெலிகிராம் செயலியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிடமிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க இணையத்தளங்களுடன் அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் என்றார் அவர்.
டெலிகிராம் செயலியில் நாசி லெமாக் எனும் உரையாடல் குழுவில் பலர் ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பார்த்ததாக அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நாடியா சம்தின் தெரிவித்தார்.
இத்தகைய பிரச்சினை அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட திருவாட்டி நாடியா, அதைத் தடுக்க அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இத்தகைய குற்றச் செயல்களைக் காவல்துறை மிகக் கடுமையாக கருதுவதாக திருவாட்டி சுன் தெரிவித்தார்.
குற்றம் புரிபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாசி லெமாக் உரையாடல் குழுவுடன் தொடர்புடைய நான்கு பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இணையம் வழி ஆபாச படங்கள், காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசாங்கம் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தியிருப்பதாக திருவாட்டி சுன் தெரிவித்தார்.
அவை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.