தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) புதிய தலைவராக சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியரணித் தலைவர் கே.தனலெட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மூத்த தொழிற்சங்கவாதியான 57 வயது திருவாட்டி தனலெட்சுமி, திருவாட்டி மேரி லியூவிடமிருந்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இரண்டு தவணைகளுக்கு அந்தப் பொறுப்பை வகித்த திருவாட்டி லியூ, அந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை.
என்டியுசியின் தலைமைச் செயலாளராக திரு இங் சீ மெங், 55, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்முறை மீண்டும் தேர்தலில் நின்ற தற்போதைய உறுப்பினர்கள் 16 பேர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
என்டியுசியின்கீழ் இயங்கும் 58 தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 450 பேராளர்கள், இரண்டு நாள் இரகசிய வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
நிர்வாகக் குழுவின் 21 உறுப்பினர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பின்னர் உயர் பதவிக்குரியோரைத் தேர்ந்தெடுத்தனர்.
நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசியப் பேராளர்கள் மாநாட்டின்போது அந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியரணித் தலைவரான திருவாட்டி தனலெட்சுமி இதற்கு முன்னர், 2015, 2019ஆம் ஆண்டுகளில் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இரண்டாம் தவணையின்போது என்டியுசியின் துணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உணவு, பானத் துறைக் கூட்டணி ஊழியர்கள் சங்கத் தலைவர் ஜூலி சியோங், 51, சிங்கப்பூர் கடல்துறை அலுவலர் சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் லேரி குவீ, 43, விமானப் போக்குவரத்து நிர்வாக ஊழியர் சங்கத் தலைவர் டேனியல் லோ, 45, சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத் தலைமைச் செயலாளர் மைக் மரியப்பா திருமன், 54, கட்டட கட்டுமானம், மரவேலைத் தொழிற்துறை ஊழியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் நூர் இர்டாவதி ஜமாருதீன், 40 ஆகிய ஐவரும் புதிதாக என்டியுசி நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், என்டியுசியின் துணைத் தலைவராக திரு அப்துல் சமது அப்துல் வஹாப், 51, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிதி விவகாரங்களுக்கான செயலாளராக திரு அரசு துரைசாமி, 55, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.