அன்றாடம் பயன்படுத்தக்கூடிய, கொவிட்-19 கொள்ளைநோயைப் பரப்பும் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் வாய் கொப்பளிப்பு திரவம் நவம்பர் 23ஆம் தேதி அறிமுகம் கண்டுள்ளது.
இந்தத் திரவம் சிங்கப்பூர் தேசிய பல் சுகாதார நிலையம் உள்ளூரில் பல் பராமரிப்பு பொருள்களைத் தயாரிக்கும் பெர்லி அண்ட் ஒயிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த வாய் கொப்பளிப்பு திரவம் வாயில் உள்ள கிருமி அளவைக் குறைக்க உதவுவதால் அது உமிழ் நீர் மூலம் கிருமி பரவும் சாத்தியத்தைத் குறைக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல் சுகாதார ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை ஆய்வாளரான இணைப் பேராசிரியர் ஜயா செனிவரத்னே கூறினார்.
எனினும், கிருமி, நாசியிலிருந்து வடியும் நீர் போல் மற்ற சுவாசம் தொடர்பான வடிநீர் மூலம் பரவக்கூடும் என்று பேராசிரியர் செனிவரத்னே நினைவூட்டினார்.
‘பெர்லி ஒயிட் டிஃபென்ஸ் ஆன்டிசெப்டிக் ஃபுளோரைட் மௌத் ரின்ஸ்’ என்ற பெயரில் இந்த வாய் கொப்பளிப்பு திரவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி 37வது அனைத்துலக பல் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் சங்கம், தென்கிழக்கு ஆசிய வருடாந்தர அறிவியல் மாநாடு, இரண்டாவது அனைத்துலக பல் சுகாதாரக் கருத்தரங்கு ஆகியவற்றின் கூட்டு நிகழ்வில் இந்த வாய் கொப்பளிப்பு திரவம் அறிமுகம் கண்டது.

