செங்காங்கில் உள்ள ஆயாம் பெஞ்ஞேட் ரியா எனும் பிரபல இந்தோனீசிய உணவகத்தில் கரப்பான்பூச்சிகள் தென்பட்டதால் அதற்கு இரண்டு வாரத் தற்காலிகத் தடை விதித்தது சிங்கப்பூர் உணவு அமைப்பு.
ரிவர்வேல் மால் கடைத்தொகுதியில் உள்ள அந்த உணவகத்தின் உரிமத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்குள் அந்த உணவகத்துக்கு 12 தண்டப் புள்ளிகள் வழங்கப்பட்டதுடன், உணவகத்தில் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள தவறியதற்காக $800 அபராதமும் விதிக்கப்பட்டது என்று உணவு அமைப்பு நவம்பர் 21ஆம் தேதியன்று கூறியது.
ஆயாம் பெஞ்ஞேட் ரியா உணவகத்துக்கு சிங்கப்பூரில் ஏழு கிளைகள் உள்ளன.
தடை விதிக்கப்பட்டுள்ள உணவகத்தில் உணவைக் கையாளும் பணியாளர்கள் அனைவரும் மீண்டும் ஊழியரணி முதல் நிலை ஆற்றல் தகுதி உணவுப் பாதுகாப்புப் பயிற்சி எடுத்த பின்னர்தான், அவர்கள் மீண்டும் தடை செய்யப்பட்ட உணவகத்தில் வேலை செய்ய முடியும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

