தெம்பனிசில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலைக்கு மேலே கனமான மூட்டையை பளுதூக்கியால் தூக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேசிய பூங்காக் கழகத்தின் ஒப்பந்ததாரர் மேற்கொண்ட அந்த வேலையை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 22ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான படம் எஸ்ஜி ரோட் விஜிலான்டேயின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. அந்தப் படத்தில் ஒரு பெரிய மூட்டையை பளுதூக்கி வாகனம் தூக்குவதைக் காட்டியது. அப்போது சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. மேம்பாலத்தில் இருந்த நான்கு ஊழியர்களின் பக்கமாக அந்த மூட்டை தூக்கப்பட்டது.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய தேசிய பூங்காக் கழகத்தின் ஓ சியோவ் ஷெங், ஒப்பந்ததாரர் ஒருவர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படுவது குறித்து தகவல் வந்ததும் வேலையை நிறுத்த உத்தரவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.
“உடனடியாக வேலையை நிறுத்த ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டோம். இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கினோம்,” என்று திரு ஓ சொன்னார்.
நவம்பர் 24ஆம் தேதி அந்த ஒப்பந்ததாரருக்கு பாதுகாப்பு விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மறுபயிற்சிக்கு செல்லும் வரை பாரங்களைத் தூக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட இடைக்காலமாக தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.