அதிபர் தர்மன் சண்முகரத்னம் நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை பணிநிமித்த பயணம் மேற்கொண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் செல்கிறார்
அதிபர் தர்மன், அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில், உலகத் தலைவர்கள் கருத்தரங்கு தொடரில் மதிப்புமிக்க முக்கிய உரை நிகழ்த்துவார்.
பின்னர் அதிபர், ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெசையும் பல்வேறு மூத்த நிதித்துறை தலைவர்களையும் சந்திப்பார். மேலும் அவர் அமெரிக்காவில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் குழுவையும் சந்தித்து உரையாடுவார்.
நியூயார்க் மத்திய வங்கி ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐக்கிய நாட்டு மனித மேம்பாட்டு அறிக்கை ஆலோசனைக் குழுவுக்கும் 30 பேர்கொண்ட சிறப்புக் குழுவுக்கும் அதிபர் தர்மன் தலைமை வகிப்பார்.
அதிபர் தர்மனுடன், அதிபர் அலுவலகத்தின் அதிகாரிகளும் உடன் செல்வர்.
அதிபர் நாட்டில் இல்லாதபோது, அதிபர் ஆலோசனை மன்றத் தலைவர் திரு எடி டியோ, அதிபரின் பணிகளைக் கவனிப்பார்.