இருவர் இடையே தொடங்கிய வாக்குவாதம் ஒருவரின் மரணத்தில் போய் முடிந்தது.
இதற்குத் தண்டனையாக மரணம் விளைவித்த சக்திவேல் சிவசூரியன், 33, என்பவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திரு மஞ்சுநாதா லூயிஸ் ரவி என்பவரை சக்திவேல் குத்தியதால் அவர் கீழே விழுந்து, பின்னர் மருத்துவமனையில் ஐந்து நாள்கள் கழித்து உயிரிழந்தார்.
மரணம் விளைவிக்கும் நோக்கத்தில் காயத்தை வேண்டுமென்றே விளைவித்ததன் தொடர்பில் அக்டோபரில் சக்திவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை முன்கூட்டியே திட்டமிட்டு சக்திவேல் செயல்படவில்லை என்று மாவட்ட நீதிபதி ஜேம்ஸ் எலிஷா லீ தெரிவித்தார்.
தரையில் சரிந்து விழுந்தவருக்கு உதவ சக்திவேல் முயற்சி செய்ததாகவும் அறியப்படுகிறது.
இருப்பினும், சக்திவேல் வழக்கு கோரியதுடன் வழக்கு விசாரணையின்போது விசாரணை மேற்கொண்ட அதிகாரி மீது சக்திவேல் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறியதைச் சுட்டிய நீதிபதி, திருந்தியதற்கான அறிகுறி சக்திவேலிடம் தென்படவில்லை என்று குறிப்பிட்டார்.
திரு மஞ்சுநாதா, சக்திவேல், சக்திவேலின் மனைவி, சக்திவேலின் உறவினர் ஆகிய நால்வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில் கங்சா ரோட்டிலுள்ள வீவக புளோக் ஒன்றை நோக்கி டாக்சியில் சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பின்னர் அவர்கள் டாக்சியிலிருந்து இறங்கிய பிறகு வாக்குவாதமாக வெடித்தது.
திரு மஞ்சுநாதாவை சக்திவேல் பின்னால் இருந்து குத்தியதாகவும் அப்போது திரு மஞ்சுநாதா கீழே விழுந்து தலையைத் தரையில் இடித்ததாகவும் கூறப்படுகிறது.
இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு மஞ்சுநாதா, மூளை பாதிக்கப்பட்டு பின்னர் ஜூலை 23ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
அவரின் மரணத்திற்குத் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்பட்ட காயங்கள் காரணம் என்று பிரேத பரிசோதனை முடிவுகள் கூறின.