ஆண்டு இறுதி போனசாக இவ்வாண்டு அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 0.6 மாத போனஸ் வழங்கப்படும் என்று நவம்பர் 27ஆம் தேதி பொதுச் சேவைப் பிரிவு அறிவித்தது.
இதில் தரநிலை எம்எக்ஸ் 13(1), தரநிலை எம்எக்ஸ் 14 அல்லது அவற்றுக்கு இணையான பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் மொத்த கூடுதல் தொகையாக $400 பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எம்எக்ஸ் 15, எம்எக்ஸ் 16 மற்றும் ‘ஆபரேஷன்ஸ் சப்போர்ட் ஸ்கீம்’ என்ற நடவடிக்கை ஆதரவுப் பிரிவின்கீழ் வரும் ஊழியர்கள் மொத்த கூடுதல் தொகையாக $800 பெறுவர் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தத்தில் 2023 ஆண்டு, அரசாங்க ஊழியர்கள் முழு ஆண்டு போனசாக 0.9 மாத போனஸ் அல்லது மாறுவிகித ஊக்கத்தொகை பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்எக்ஸ் 13(1) அல்லது அதற்கு இணையான பிரிவிலுள்ள அதிகாரிகள் மொத்த கூடுதல் தொகையாக $1,200 பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், ஓய்வுக்கால ஊதியத்தின்கீழ் வராத அல்லது 13ஆவது மாத போனஸ் என்று அழைக்கப்படும் தொகையை அனைத்து அரசாங்க ஊழியர்களும் பெறுவர் என்றும் பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
இந்த அறிவிப்பு பொதுத் துறைத் தொழிற்சங்கங்களுடனான அணுக்கமான ஆலோசனைக்குப் பின் வெளியிடப்பட்டதாக பொதுச் சேவைப் பிரிவு விளக்கமளித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் சாம் ஹுவி ஃபோங், “சவால் மிகுந்த வெளிப்புற சமுதாய, அரசியல், பொருளியல் அம்சங்கள் நிலவுகிறது.
“இருந்தபோதும், ஆண்டு இறுதி மாறுவிகித வழங்கு தொகை குறித்து பொதுச் சேவைப் பிரிவு, அரசாங்க தொழிற்சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, முடிவுகள் யாவும் அதிக அக்கறையுடனும் நல்லெண்ணத்துடனும் அரசாங்க ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன,” என்றார்.