ராணுவ விமானியாகப் பணியாற்றிய தன் மாமாவை முன்மாதிரியாகக் கொண்டு சிங்கப்பூர் விமானப்படையில் சேர்ந்தவர், அது மிகவும் பிடித்துப்போய் தன் வாழ்க்கையையே நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
விமானப்படையின் மின்னணுப் போர் மற்றும் ஆகாயப் போர்த்திறனுக்குரிய 110 படைப் பிரிவின் துணைத் தலைவராகச் சேவையாற்றுகிறார் 6ஆம் நிலை ராணுவ வல்லுநர் சதானந்தர் சுரேஷ், 48.
நவம்பர் 27, 28ஆம் தேதிகளில் நடைபெற்ற தேசிய தின விருது விழாவில் விருது பெற்ற 942 தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப் படைப் பிரிவினரில் அவரும் ஒருவர். இவ்விழாவில் மொத்தம் 142 பாராட்டு விருதுகள், 162 சீரிய பணி விருதுகள், 652 நெடுநாள் சேவை விருதுகள் ராணுவத்தினருக்கும் ராணுவ வீரர்கள் அல்லாதோருக்கும் வழங்கப்பட்டன.
25 ஆண்டுச் சேவைக்காக நெடுநாள் சேவை விருதைத் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ்விடமிருந்து பெற்றார் திரு சுரேஷ்.
2020ல் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த ‘ஃபாஸ்ட்’ செயற்குழுத் தலைவராகப் பணியாற்றியதற்காக நவம்பர் 21ஆம் தேதி, கொவிட்-19 பாராட்டு, மீள்தன்மை விருதுகளையும் இவர் பெற்றார்.
வெளிநாட்டு ஊழியர்கள், தங்குமிடப் பணியாளர்கள், மனிதவள, சுகாதார அமைச்சு எனப் பல தரப்பினருடனும் ஒன்றாகச் செயல்பட்டதையே ராணுவத்தில் தன் மிக முக்கிய அனுபவமாக நினைவுகூர்கிறார் திரு சுரேஷ்.
தேசிய சேவையின் 50வது ஆண்டு நிறைவு விழாவின் இரவு விருந்துக்கு நிதி ஆலோசகராகவும், 2021 தேசிய தின அணிவகுப்பின் மின்சக்தி ஆதரவுத் தலைவராகவும் செயல்பட்ட இவர், பலவிதமான பொறுப்புகளை ஏற்க வாய்ப்புகள் பெற்றதில் மகிழ்கிறார்.
பரிணாம வளர்ச்சி
சிறுவயதிலிருந்தே திரு சுரேஷின் மாமா ஓய்வுபெற்ற கர்னல் ஃபிரேங்க் சிங்கம், பல விமானக் கண்காட்சிகளுக்கும் அவரை அழைத்துச் சென்று அத்துறையில் அவரது நாட்டத்திற்கு வித்திட்டார்.
பொறியியலில் பட்டயக் கல்வி முடித்ததும் 1995ல் விமானப்படையில் மூத்த தொழில்நுட்பராகச் சேர்ந்த திரு சுரேஷ், அன்றைய ஏ-4 ‘ஸ்கைஹாக்’ விமானங்களின் தீயணைப்புக் கட்டமைப்புகளில் பணியாற்றினார்.
சேர்ந்த சில ஆண்டுகளிலேயே ஓர் அணிக்குத் தலைமைதாங்கி பெக்கான்பாருவிற்கு அழைத்துச் சென்ற வாய்ப்பும், விமானப்படையின் விரைவான வேலையிடச் சூழலும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
1998ல் விமானப் பராமரிப்பு அதிகாரியாகப் பதவியேற்றவர், சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று, மின்பொறியியலில் தன் இளநிலைப் பட்டத்தையும் பெற்றார்.
நாளடைவில் விமானப் பொறியியல் அதிகாரியாகப் பொறுப்பேற்றவர், ராணுவ நிபுணத்துவத் திட்டம்வழி நிபுணரானார்.
தொடரும் பயணம்
தற்போது தற்காப்பு அமைச்சின் ஆதரவோடு செயற்கை நுண்ணறிவில் பகுதிநேர முதுநிலைக் கல்வியையும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார் திரு சுரேஷ்.
“அதிநவீனத் தொழில்நுட்பங்களோடு இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிந்த விமானப்படை எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை வழங்குகிறது,” என்கிறார்.
நாட்டிற்காகச் சேவையாற்றுவதிலும் இளையர்களை வழிநடத்துவதிலும் தமக்குக் கிடைத்துள்ள மனநிறைவு தம்மை மேலும் பல்லாண்டுகளுக்குச் சேவையாற்ற இட்டுச் செல்லும் என உறுதியாக நம்புகிறார் திரு சுரேஷ்.