உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம் தமக்கு எதிராக டிக்டாக் சமூக ஊடகத்தில் தான் திருமண உறவைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பதாக வந்த பதிவு குறித்து டிக்டாக்குக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடுத்துள்ளார்.
இதில் அந்தப் பொய்த்தகவலை பதிவிட்ட மூவர் பற்றிய தகவலை, அவர்கள் மீது வழக்கு தொடுக்க ஏதுவாக, டிக்டாக் அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திரு சண்முகம் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து திரு சண்முகம் மூன்று பிரமாண வாக்குமூலப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக அறியப்படுகிறது. அவற்றில் கூறப்பட்டுள்ள புகார்கள் பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற புகார்கள் என்றும் அவற்றை திரு சண்முகம் பல முறை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு சண்முகம் தமது பிரமாண வாக்குமூலப் பத்திரங்களில் தமக்கு எதிராக டிக்டாக்கில் பதிவு செய்த மூவர் பற்றிய தகவலை அந்த சமூக ஊடகம் நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே தகவலை தர முடியும் என டிக்டாக் தெரிவித்ததை சுட்டிக் காட்டியுள்ளதாக அறியப்படுகிறது.

