சைனாடவுனின் பாதுகாக்கப்பட வேண்டிய வட்டாரத்தில் அமைந்துள்ளது ஸ்மித் ஸ்திரீட்.
இங்கு கூடுதல் வருகையாளர்களை ஈர்க்கும் வகையில் புது மெருகூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
உணவு வகைகளுக்குப் பெயர்பெற்ற இந்தத் தெருவில், விளையாட்டு அம்சங்களுடன்கூடிய சுற்றுலாக்கள், கலை, கலாசார காட்சிக்கூடங்கள், உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் போன்றவை இடம்பெறவிருக்கின்றன. அதேநேரத்தில் அந்த வட்டாரத்தின் கலாசார, கட்டடக்கலை மரபுடைமையும் கட்டிக்காக்கப்படும்.
ஸ்மித் ஸ்திரீட்டில் இத்தகைய புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகை விண்ணப்பங்களுக்கு, சிங்கப்பூர் நில ஆணையம், சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம், நில மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. நவம்பர் 30ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியானது.
ஸ்மித் ஸ்திரீட்டில் கதவிலக்கம் 11 முதல் 37 வரை கொண்ட கடைவீடுகளைப் புதுப்பிக்கும் குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம். அந்தக் கடைவீடுகளுக்கு அருகில் உள்ள அரசாங்க நிலத்தில் அமைந்துள்ள கடைகளும் புதுப்பிக்கப்படும்.
மொத்தம் 3,166 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலப் பகுதியில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகை வழங்கப்படும். அடுத்த தவணைக்கு அதை நான்கு ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக்கொள்ளலாம்.
சைனாடவுன் வட்டாரத்திற்குப் புத்துயிரூட்டும் சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக, 2001ஆம் ஆண்டு, ஸ்மித் ஸ்திரீட் திறக்கப்பட்டது. 100 மீட்டர் நீளத்திற்கு, தள்ளு வண்டிகளில் பிரபல உணவு வகைகள் விற்கப்படும் அந்த இடத்தில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அக்டோபர் 2021ஆம் தேதி அது மூடப்பட்டது.
புது மெருகூட்டும் பணிகள், அந்த வட்டாரத்திற்குப் புத்துயிரூட்டும் வகையிலும் அங்கு வழக்கமான இடைவெளியில் சமூக நிகழ்ச்சிகள் நடைபெற உதவும் வகையிலும் அமைந்திருக்கும் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரின் பல கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஸ்மித் ஸ்திரீட்டில் தொடர்ந்து பல்வேறு வகையான உணவு, பானங்கள் விற்கப்படும் என்று கூறப்பட்டது.