நியூயார்க்: மீள்திறனையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே சிக்கல் இல்லாத உலகை மேம்படுத்துவதற்கான முக்கிய பணி என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், இதனைச் சாதிக்க பலதரப்பட்ட முயற்சிகளும் ஜனநாயகம் செயல்படும் விதத்தை மறுசீரமைப்பதும் அவசியம் என்றார் அவர்.
“மிகச் சரியான தீர்வுகள் இல்லாதபோதிலும் துணிச்சலான செயல்பாடுகள் இன்னும் நம் கைக்குள்தான் உள்ளன,” என்றும் திரு தர்மன் குறிப்பிட்டார்.
நியூயார்க் நகரில் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் உலகத் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று அதிபர் தர்மன் செற்பொழிவாற்றினார்.
அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் பங்கேற்று இருக்கும் முதல் பன்னாட்டுப் பெருநிகழ்வு அது. கிட்டதட்ட 300 பல்கலைக்கழக மாணவர்களும் அங்கு குழுமியிருந்தனர். அமெரிக்காவுக்கான தமது பயணத்தின் இரண்டாம் நாளில் அவர் அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றார்.
அனைத்துலக மற்றும் பொது விவகாரக் கல்விக்கூடத்தில் உள்ள உலகமய அரசியல் பயிற்றகம் இந்தக் கருத்தரங்கின் இணை ஏற்பாட்டாளர்.
அனைத்துலகப் புரிதலைப் பேணி வளர்க்க 1949 முதல் இந்தச் சொற்பொழிவும் கருத்தரங்க நிகழ்வும் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் திரு லீ குவான் யூ இதேபோன்ற கருத்தரங்கில் 1968ஆம் ஆண்டு பங்கேற்றார்.