சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் கோவை நகருக்கு ஸ்கூட் விமானம் மூலம் விலங்குகளைக் கடத்திய சந்தேகத்தில் தேசிய பூங்காக் கழகம் விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து தேசிய பூங்காக் கழகத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் கேட்டறிந்ததன்படி நவம்பர் 7ஆம் தேதி TR540 என்ற ஸ்கூட் விமானத்தில் விலங்குகள் கடத்தப்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கழகம் கூறியது. இதன் தொடர்பில் விசாரித்து வருவதாகவும் அது குறிப்பிட்டது.
சம்பவம் குறித்து தங்களுக்கும் தெரியும் என்றும் இப்போது அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் ஸ்கூட் விமானம் தெரிவித்தது.
நவம்பர் 10ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் பயணிகள் தங்களின் பயணப்பெட்டிகளை எடுத்துக்கொள்ளும் இடத்தில், மூன்று பயணப்பெட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. அவற்றில் காட்டு சிலந்திகள், ஆமைகள், பாம்புகள் இருந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
விமான அதிகாரிகள் பயணப்பெட்டிகள் குறித்து மூன்று பயணிகளுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர்களில் இருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பதற்காகச் சந்தேக நபர்கள் அவற்றைச் சட்டவிரோதமாகக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இந்திய வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரிலிருந்து விலங்குகளை ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் தேசிய பூங்காக் கழகத்திடம் இருந்து உரிய அனுமதி பெறவேண்டும்.