சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க 10 விழுக்காடு கூடியது.
ஜனவரி முதல் அக்டோபர் வரை மொத்தம் 188 பேரிடம் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக எச்ஐவி தொற்று குறைந்து வந்த நிலையில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் எண்ணிக்கை சற்று அதிகரித்தது.
கடந்த ஆண்டு பதிவான 202 எச்ஐவி தொற்றுச் சம்பவங்கள், 1998க்குப் பிறகுப் பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கையாகும்.
2019 முதல் 2021 வரை எச்ஐவி தொற்று எண்ணிக்கை முறையே 323, 261, 250 எனப் பதிவானது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 97 விழுக்காட்டினர் ஆண்கள்.
அவர்களில் 48 விழுக்காட்டினரிடம் தொற்று கண்டறியப்பட்டபோது அது கடைசிக் கட்டத்தில் இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 11 விழுக்காடு குறைவு.
தொற்று கண்டறியப்பட்டோரில் 27 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்; 21 விழுக்காட்டினர் 40 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்; 23 விழுக்காட்டினர் 50 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இவ்வாண்டின் முற்பாதியில் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டோரில் 96 விழுக்காட்டினரை எச்ஐவி தொற்ற பாலியல் உறவே காரணமாக விளங்கியதாக அமைச்சு சொன்னது.
எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டவர்களில் 58 விழுக்காட்டினர் மருத்துவப் பராமரிப்பு பெற்றபோது அத்தொற்று கண்டறியப்பட்டது; தாங்களாக முன்வந்து பரிசோதனைக்குச் சென்றபோது 18 விழுக்காட்டினரிடம் தொற்று கண்டறியப்பட்டது; வழக்கமான பரிசோதனைக்குச் சென்றபோது 13 விழுக்காட்டினரிடம் தொற்று கண்டறியப்பட்டது.
“எச்ஐவி தொற்றைத் தவிர்ப்பதற்கான ஆக ஆக்கபூர்வமான வழி, தங்களுடைய துணைவியாரிடம் விசுவாசமாக இருப்பதும் பாலியல் தொழிலாளர்களுடன் பாலியல் உறவைத் தவிர்த்துக்கொள்வதுமே,” என்று அமைச்சு அறிவுறுத்தியது.