வரும் 2024ல் ஊழியர்கள் 4 விழுக்காடு சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று திறனாளர்களுக்கு பணிகளை தேடித்தரும் நிறுவனங்களின் அண்மையத் தரவுகள் காட்டுகின்றன.
பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2023ஆம் ஆண்டில் காணப்பட்ட சரிவுடன் ஒப்பிடும்போது, உண்மையான ஊதிய வளர்ச்சி இருக்கும் என்று சில நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன.
வான்வெளித்துறை ஆக அதிகமான 4.5 விழுக்காடு உயர்வை பெறும். அடுத்து வங்கிகள், நிதித்துறை, நுகர்வோர் பொருள்கள் விற்பனை நிறுவனங்களும் வாழ்க்கைப்பாணி சில்லறை வணிகமும் 4.4 விழுக்காட்டு சம்பள உயர்வைப் பெறும் என்று மெர்சர் புரொஜெக்ட்ஸ் ஆலோசனை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வாழ்க்கைப்பாணி சில்லறை வணிகம், நுகர்வோர் பொருள்கள் துறைகளில் 2023ல் சம்பள உயர்வு தொடரும் என்று 18 துறைகள் சார்ந்த 1,106 நிறுவனங்களிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் மெர்சர் தெரிவித்துள்ளது.
உயர்தொழில் நுட்பம் 4.1 விழுக்காடு உயர்வையும், தளவாடத் துறை 4 விழுக்காடு உயர்வும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2023ல் அத்துறைகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களையும் அனைத்துத் துறைகளுக்கும் 2024ல் முன்னுரைக்கப்பட்ட 4.2 விழுக்காடு உயர்வைவிடவும் இது குறைவு.
நுகர்வோர் பொருள்கள், வாழ்க்கைபாணி சில்லறை வணிகத் துறையின் முன்னேற்றத்திற்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவம், விற்பனை வளர்ச்சியில் தொழில்நுட்பமும் தரவு அடிப்படையிலான அணுகுமுறையும் காரணம் என்று மெர்சர் சிங்கப்பூர் நிறுவனத்தின் ஆலோசனை தலைவரான திருவாட்டி. ஆண்ட்ரியா டான் குறிப்பிட்டார்.
இரு துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் தரவு பகுப்பாய்வு, மின்னிலக்கச் சந்தைப்படுத்துதல் நிபுணத்துவத் திறன்களுக்காகப் போட்டியிடுகின்றன என்றார் அவர்.
ஊதியம் அதிகரிக்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ள முதல் மூன்று துறைகளாக சில்லறை வணிகமும் இணைய வணிகமும், எரிசக்தி, தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. இவை முறையே 5%, 4.8%, 4.7% உயர்வைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை மற்றும் தொழில்முறை சேவைகள், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறை, கணினி விளையாட்டுத் துறை (கேமிங்) ஆகியவற்றுக்கான கணிப்பு ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிடக் குறைவாக உள்ளது.
ஆள்சேர்ப்பு நிறுவனமான பெர்சோல்கெல்லியும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து சம்பள வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.