நாணய சேகரிப்பாளரான 72 வயது திரு ஆண்டியப்பன், டிபிஎஸ் வங்கியின் மூன்று கிளைகளுக்குச் சென்ற பிறகுதான் எட்டு $10 லீ குவான் யூ நூற்றாண்டு (எல்கேஒய்100) நினைவு நாணயங்களைப் பெற முடிந்தது.
ஓய்வு பெற்றவரான அவர், டிசம்பர் 4ஆம் தேதி பீஷானில் உள்ள டிபிஎஸ் வங்கிக் கிளைக்கு முதலில் சென்றார். பின்னர் பூன் கெங்கில் உள்ள டவ்னர் ரோடு கிளைக்குச் சென்றார். ஆனால் இரண்டு கிளைகளிலும் நினைவு நாணயங்கள் தீர்ந்துவிட்டன.
இரண்டாவது கிளையில் கியூஆர் குறியீட்டை வருடி எந்தக் கிளைகளில் நினைவு நாணயம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிளாசா சிங்கப்பூராவில் உள்ள டிபிஎஸ் கிளைக்கு அவர் சென்றார். அங்குதான் அவருக்கு நினைவு நாணயங்கள் கிடைத்தன. அப்போது அவருக்கு ஏற்பட்ட பூரிப்புக்கு அளவே இல்லை. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகு பிற்பகல் 1.40 மணியளவில் எட்டு நாணயங்களை அவர் வெற்றிகரமாகப் பெற்றார்.
“பொதுமக்களுக்கு நல்ல வழியில் உதவிகள் வழங்கப்பட்டன,” என்று வங்கியின் இணையத் தளத்தில் நாணயம் கிடைக்கும் இடங்கள் பட்டியலிடப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் 3.3 மில்லியன் நாணயங்களைப் பெற 700,000 பேர் இணையம் வழியாக விண்ணப்பித்திருந்தனர். 2023 மே மாதம் நான்கு மில்லியன் லீ குவான் யூ நினைவு நாணயங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்கள் டிசம்பர் 3ஆம் தேதி வரை தங்கநிற ‘எல்கேஒய்100’ பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூவின் உருவம் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
மறுநாளே 142 கிளைகளில் 700,000க்கும் மேற்பட்ட நாணயங்கள் விநியோகிக்கப்பட்டன.
டிசம்பர் 4ஆம் தேதி அன்று நாணயங்களைப் பெறுவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் கிளைகள் திறக்கப்படுவதற்கு முன்பே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில கிளைகளில் வங்கி திறக்கப்பட்ட சில நிமிடங்களில் நாணயங்கள் தீர்ந்துவிட்டன.
அங் மோ கியோ சென்ட்ரல் டிபிஎஸ் வங்கி கிளை காலை 8.30 மணிக்குத் திறக்கப்பட்டபோது வரிசை எண்கள் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் உட்கார பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்டன.
ஆனால் காலை 11.00 மணிக்குத் திறக்கப்பட்ட அங் மோ கியோ ஹப்பில் உள்ள யுஓபி கிளையில் காத்திருந்த மக்கள் வரிசை மெதுவாக நகர்வதாக ஆதங்கப்பட்டனர்.
அங்கு வாடிக்கையாளர்கள் நாணயங்களைப் பெற குறிப்பிட்ட முகப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டிபிஎஸ் ஊழியர் ஒருவர், மற்ற வங்கி தொடர்பான வேலைகள் இருந்ததால் வரிசை மெதுவாக நகர்ந்தது என்று கூறினார். அங் மோ கியோ சென்ட்ரல் டிபிஎஸ் கிளையில் இரண்டு மணி நேரம் காத்திருந்ததாக சிலர் கூறினர்.
அங் மோ கியோவில் உள்ள ஓசிபிசி கிளை காலை 11.30மணிக்கு மேல் நாணயங்களை விநியோகித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு ஆண்டியப்பன், தமக்கு முன்பு நின்று இருந்த வாடிக்கையாளர் ஒருவர், 600 நாணயங்கள் வாங்கியதாக தம்மிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
‘கேரோசல்’, ‘இபே’ போன்ற இணையத் தளங்களில் லீ குவான் யு நினைவு நாணயங்கள் $12 முதல் $450 வரை விற்கப்படுவதாக அறியப்படுகிறது.